எஸ்.டி.பி.ஐ அலுவலகத்தில் சோதனை

கோவை கோட்டைமேடு ஈஸ்வரன் கோயில் வீதியில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் கோவை மாவட்ட தலைமை அலுவலகம் உள்ளது. இங்கு வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள். மாவட்ட தலைவர் முஸ்தபா மற்றும் கட்சி நிர்வாகிகள் அங்கு இருந்தனர். கட்சி நிதி வசூல் உள்ளிட்ட கணக்கு ஆவணங்களையும் கம்ப்யூட்டரில் பதிவாகி உள்ள தகவல்களையும் வருமான ஆய்வு செய்துள்ளனர். மேலும்,  சமீபத்தில் நடந்த பண பரிமாற்றங்கள், வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்ட நிதி பரிமாற்ற விவரங்களையும் வருமானவரித்துறை விசாரித்தனர். இரவு 8.30 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை பல மணிநேரம் நீடித்தது. இந்த சோதனையையொட்டி பாதுகாப்புக்காக அந்த பகுதியில் காவல்றையினர் குவிக்கப்பட்டனர். வருமானவரித்துறை சோதனை தொடர்பான தகவல் அறிந்ததும், எஸ்.டி.பி.ஐ கட்சியினர் அங்கு வந்து எதிர்ப்பு கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதை கட்டுப்படுத்த அதிகமான அளவில் காவலர்கள் வரவழைக்கப்பட்டனர். எஸ்.டி.பி.ஐ கட்சியினரால் அங்கு போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. சோதனை இரவு 11 மணிக்கு நிறைவு பெற்றது. கட்சி நிர்வாகிகள் வருமானவரித்துறை அலுவலகத்துக்கு வந்து விவரங்களை தெரிவிக்குமாறு அதிகாரிகள் சம்மன் கொடுத்துவிட்டு சென்றனர்.