ஆராயாமல் அறிக்கை வெளியிட்ட ஸ்டாலின்

சத்ரபதி சிவாஜியின் பிறந்தநாளையொட்டி, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் கடந்த 19ம் தேதி மாலை சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏ.பி.வி.பி மாணவர் அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்தனர். நிகழ்ச்சி முடிவடைந்ததை அடுத்து, சிறிது ஓய்வுக்காக அருகிலுள்ள கேன்டீனுக்கு மாணவர்கள் சென்றனர். அப்போது, அரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த சத்ரபதி சிவாஜி, ராணா பிரதாப் ஆகியோரின் உருவப் படங்களை எஸ்.எப்.ஐ. இடதுசாரி அமைப்பைச் சேர்ந்த மாணவர்களும், வெளியிலிருந்து அழைத்துவரப்பட்ட லதா என்பவர் உட்பட இடதுசாரி அமைப்பைச் சேர்ந்தவர்களும் உடைத்து சேதப்படுத்தினர். இதையறிந்து அங்கு வந்த ஏ.பி.வி.பி. மாணவர்கள் எஸ்.எப்.ஐ அமைப்பினரை தட்டிக் கேட்டபோது அவர்களை எஸ்.எப்.ஐ அமைப்பினரும் அவர்களுடன் வந்த குண்டர்களும் தகாத வார்த்தைகளால் திட்டினர். இதனால், ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினரும் காயமடைந்தனர். இந்த சூழலில், ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் நடந்தது என்ன என்பது தெரியாமலேயே, தமிழக மாணவர் ஏ.பி.வி.பி. அமைப்பினரால் தாக்கப்பட்டதாகக் கூறி தனது கண்டனத்தை பதிவு செய்திருந்தார் தமிழக முதல்வரும், தி.மு.க. தலைவருமான ஸ்டாலின். இது ஏ.பி.வி.பி. அமைப்பினரிடையேம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அவர்கள், பல்கலைக் கழகத்தில் என்ன நடந்தது என்பது தெரியாமலேயே ஏ.பி.வி.பி. அமைப்பினர் மீது குற்றம் சுமத்திய ஸ்டாலின் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து அந்த அமைப்பின் மத்திய செயலாக்கக் குழு உறுப்பினர் முத்துராமலிங்கம் கூறுகையில், “டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழத்தில் நடந்த நிகழ்ச்சியின்போது, எஸ்.எஃப்.ஐ. அமைப்பைச் சேர்ந்தவர்கள் வெளியாட்களை அழைத்து வந்து, சத்ரபதி சிவாஜி உள்ளிட்டோரின் புகைப்படங்களை உடைத்து சேதப்படுத்தினர். ஆனால், தமிழக முதல்வர் ஸ்டாலினோ, ஏ.பி.வி.பி. அமைப்பைச் சேர்ந்தவர்கள், தமிழக மாணவர்களை தாக்கியதாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். இது இன, மொழி ரீதியாக பிரிவினையை ஏற்படுத்துகிறது. பல்கலைக் கழகத்தில் நடந்ததை ஆராயாமலேயே ஸ்டாலின் பதிவிட்டிருப்பது வருத்தமளிக்கிறது. ஆகவே, ஆதாரமற்ற செய்தியை வெளியிட்டது குறித்து முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும். மன்னிப்புக் கேட்டு தனது பதிவை நீக்க வேண்டும். இல்லாவிட்டால், அவர் மீது சட்ட ரீதியாக அவதூறு வழக்கு பதிவு செய்வோம். அதேபோல, தமிழகத்தில் ராணுவ வீரர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை நிலவுகிறது. பெண் காவலர்களுக்கும், பொதுமக்களுக்கும் கூட பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. இவற்றை தீர்ப்பதில் முதல்வர் ஸ்டாலின் கவனம் செலுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார்.