பட்ஜெட் சில முக்கிய அம்சங்கள்

நாடாளுமன்றத்தில் நேற்று 2022 – 23ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதில் உள்ள சில முக்கிய அம்சங்கள்:

9.05 லட்சம் ஹெக்டேர்களுக்கு பாசனம், 65 லட்சம் மக்களுக்கு குடிநீர், சூரிய ஒளி மின்சாரம் வழங்க ரூ. 44,605 கோடியில் கென் பெட்வா இணைப்பு திட்டம், ரசாயனம் அற்ற இயற்கை விவசாயம் ஊக்குவிப்பு, பயிர் சேதங்களை ஆராய டிரோன்கள் பயன்பாடு, விவசாயிகளிடம் இருந்து தானிய கொள்முதல் அதிகரிக்க திட்டம், விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்காக 2.3 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும். நாடு முழுவதும் 4 இடங்களில் சரக்கு தளவாட பூங்காக்கள் அமைத்தல், விவசாயிகளிடம் இருந்து 1,000 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு, பிரதமர் அவாஸ் யோஜனா திட்டத்திற்கு ரூ. 48,000 கோடி ஒதுக்கீடு போன்றவை செயல்படுத்தப்படும்.

ஊரக, பட்டியலின, பழங்குடியின மாணவர்களின் கல்வி, கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதால், கல்வி ஒளிபரப்பிற்காக 200 புதிய டிவி சேனல்கள் துவக்கப்படும். 1 முதல் 12ம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்விக்கு முக்கியத்துவம், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இணைய வழி பாடத்திட்டம் ஊக்குவிப்பு, அனைத்து மாநில மொழிகளிலும் மாணவர்கள் டிஜிட்டல் வழியில் கல்வி கற்க புதிய திட்டம், நாட்டின் பல்வேறு பகுதிகளில் டிஜிட்டல் பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்படும். இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ஒலி, ஒளி, வரைகலை சார்ந்த பணிகள் ஊக்குவிக்கப்படும். மேக் இன் இந்தியா திட்டம் மூலம் 60 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.

நதிகள் இணைப்பு தொடர்பான 5  திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல், காவிரி – பெண்ணாறு இணைப்பு திட்டம் மாநில அரசுகளின் ஒப்புதலுக்கு பின் நிறைவேற்றப்படும். ‘பர்வத்மாலா’ திட்டத்தின்கீழ் மலைப்பகுதிகளில் உள்ள சாலைகளை மேம்படுத்த நடவடிக்கை, எல்லைப்புற கிராமங்களை மேம்படுத்தவும் சுற்றுலா, அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். வீடில்லாத 18 லட்சம் பேருக்கு 2023ம் ஆண்டுக்குள் வீடுகள் கட்டித்தரப்படும்.

கொரோனா தொற்றுநோய் மனநலப் பிரச்சினையை போக்க தேசிய தொலைநோக்கு மனநலத் திட்டம், தேசிய அளவில் மக்களுக்கு மனநல ஆலோசனைகளை வழங்க டெலி மருத்துவ வசதிகள் தொடங்கப்படும். விவசாயிகளுக்கும், தொழில் துறையினருக்கும் உதவி புரியும் வகையில், ரயில்வே போக்குவரத்தும் மேம்படுத்தப்படும். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கப்படும். நாட்டின் மூலதனச் செலவுகள் ரூ. 7.5 லட்சம் கோடியாக அதிகரிக்கப்படும்.

தேசத்தின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் மத்திய அரசின் 1,486 சட்டங்கள் ரத்து, தொழில் தொடங்குவதற்கு உகந்த சூழல் உருவாக்கும் திட்டங்கள், பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சகி திட்டம், ஊட்டச்சத்து திட்டம், வாத்சல்யா திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும். டிஜிட்டல் சிப் கொண்ட இ பாஸ்போர்ட் அறிமுகப்படுத்தப்படும்.

2023க்குள் தனியார் மூலம் 5 ஜி வசதி, 2025க்குள் 100 சதவீத ஆப்டிக்கல் பைபர் நெட் வசதி, ராணுவ தளவாட உற்பத்தியில் உள்நாட்டு தயாரிப்புகள் ஊக்குவிக்கப்படும். 2030க்குள் சூரியஒளி மூலம் 280 ஜிகா வாட் மின்சாரம் தயாரிக்கும் இலக்குடன், எரிசக்தி சேமிப்புக்கு புதிய திட்டம், சூரிய மின்சக்தி திட்டங்களுக்கு ரூ. 19,500 கோடி ஒதுக்கீடு, உள்நாட்டு சூரிய ஒளி மின்சார தயாரிப்பு நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

நாட்டின் தேசிய நெடுஞ்சாலை வரும் நிதியாண்டில் 25,000 கி.மீ தொலைவுக்கு புதிய சாலைகள், அடுத்த 3 ஆண்டுகளில் 400 புதிய வந்தேபாரத் ரெயில்கள், 100 சரக்கு முனையங்கள் அமைக்கப்படும்.

தனி நபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றம் இல்லை. ரிசர்வ் வங்கியால் டிஜிட்டல் கரன்சிகளை வெளியிடும். கிரிப்டோ கரன்சி போன்ற மெய்நிகர் சொத்து வருமானத்திற்கு 30 சதவீதம் வரி விதிக்கப்படும். வருமான வரி சோதனையில் கண்டுபிடிக்கப்படும் கணக்கில் காட்டப்படாத சொத்துகளுக்கான சலுகைகள் ரத்து செய்யப்படும். கூட்டுறவு சங்கங்களுக்கு மாற்று குறைந்தபட்ச வரி 15 சதவீதமாக குறைப்பு, கார்ப்பரேட் கூடுதல் கட்டணம் 7 சதவீதமாக குறைப்பு அமலாகும்.

நில ஆவணங்களை கணினிமயமாக்கி, ‘ஒரே நாடு – ஒரே பத்திரப்பதிவு’ திட்டம் ஊக்குவிக்கப்படும். தேசம் முழுவதும் 75 மாவட்டங்களில் டிஜிட்டல் வங்கிகள் உருவாக்குதல், தபால் நிலையங்கள் வங்கிகளுடன் இணைப்பு, திருத்தப்பட்ட வருமான வரி கணக்கை தாக்கல் செய்வோருக்கு 2 ஆண்டுகள் அவகாசம், ஸ்டார்ட் அப்களுக்கான வரிச்சலுகைகள், ஊக்கத் தொகைகள் மேலும் ஒரு வருடத்திற்கு நீட்டிப்பு போன்றவை செயல்படுத்தப்படும்.