காவல் துறையில் ஆளுங்கட்சி தலையீடு

கோவையில் பத்திரிகையாளர்களிடம் பேசிய தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, ‘டெல்லியில் அமலாக்கத்துறை இயக்குனர் ராகுலை விசாரணைக்கு அழைத்ததற்கு காங்கிரஸ் எம்.பிகள் கூச்சலிட்டு பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துகின்றனர். நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை கையகப்படுத்திய சோனியாவையும் ராகுலையும் இதுகுறித்து விசாரிக்க அழைத்ததால் இந்த நாடகம். கையை வெட்டுவேன், காலை வெட்டுவேன், சுளுக்கெடுப்பேன் என பேசும் தி.மு.க அமைச்சர்களை வைத்துக்கொண்டு பா.ஜ.க தொண்டர்களை குண்டர்கள் என்று கூறுகிறார் அமைச்சர் செந்தில்பாலாஜி. காவல் துறையில் ஆளுங்கட்சியின் தலையீடு அதிகமாக உள்ளது. தமிழக காவல்துறை ஒரு பல் பிடுங்கப்பட்ட பாம்பாக உள்ளது. தி.மு.க ஆட்சிக்கு வந்தபிறகு ஏழு ‘லாக்கப்’ மரணங்கள் நடந்துள்ளன. கூட்டு பலாத்காரம் போன்றவை நடப்பது காவல் துறையின் செயலின்மையை காட்டுகிறது. முதல்வர் அடிக்கடி காவல் நிலையங்களில் ஆய்வு செய்கிறார். அவர் ஆய்வுக்கு சென்ற பின் குற்றங்கள் அதிகரித்துள்ளன. தமிழகத்தில் கஞ்சா உட்பட அனைத்துவித போதைப்புழக்கங்கள் அதிகரித்துள்ளது. பள்ளிகல்வித்துறை அமைச்சர் உதயநிதியுடன் சுற்றுகிறார். எப்படி ஒரு பள்ளிகல்வித்துறை அமைச்சர் இருக்க கூடாதோ அதற்கு சான்றாக இருக்கிறார். சிதம்பரத்தில் அதிகாரிகளை ஏவி தீட்சிதர்களை மிரட்டிய செயல் கண்டிக்கத்தக்கது. இதற்கு  ஹிந்துசமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு வெட்கப்பட வேண்டும். கோவை மாநகராட்சி கூட்டத்தில், 11வது வார்டு ஆளுங்கட்சி கவுன்சிலர் பழனிசாமி, ‘இந்த ஆட்சி சரியில்லை; நான் ராஜினாமா செய்வேன்’ என தெரிவித்துள்ளார். கோவை மாநகராட்சி நிர்வாகம் மிகவும் மோசம். மத்திய அரசு நிதியில் கட்டிய பாலங்களை திறக்காவிட்டால் நான் திறப்பேன் என பா.ஜ.க மாவட்டத் தலைவர் கூறிய பிறகு அமைச்சர் அவசரமாக ஓடிவந்து பாலம் திறக்கிறார்’ என குற்றம் சாட்டியுள்ளார்.