பெரிய கருப்பனின் மரியாதை

தமிழக சட்டசபையில் பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை தமிழக அரசே நியமிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது. மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். இந்த மசோதாவை ஆரம்ப நிலையிலேயே எதிர்ப்பதாக அ.தி.மு.க. தெரிவித்தது. இந்நிலையில் மசோதா மீதான விவாதத்தின்போது, அ.தி.மு.க. உறுப்பினரை கடுமையான வார்த்தைகளைக் கொண்டு அமைச்சர் பெரியகருப்பன் விமர்சனம் செய்ததாகக் கூறி அ.தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். வெளிநடப்புக்கு பின் நிருபர்களுக்கு பேட்டி அளித்த சட்டசபை எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம், ‘சட்டப்பேரவை நடவடிக்கையின்போது அ.தி.மு.க சார்பில், உறுப்பினர் கோவிந்தசாமி பேச முற்பட்டபோது, அமைச்சர் பெரியகருப்பன் “உட்காருடா” என்ற வார்த்தையை கொஞ்சம்கூட மரியாதை இல்லாமல் பேசிய காரணத்தால், அ.தி.மு.க சார்பில் அமைச்சர் பெரியகருப்பனைக் கண்டித்து வெளிநடப்பு செய்திருக்கிறோம். சந்தர்ப்ப சூழ்நிலைக்கு தகுந்தவாறு தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது. பாரத அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஆளுநருக்கு என்று சில தனிப்பட்ட அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அந்த அதிகாரத்திற்கு உட்பட்டுதான் ஆளுநர் செயல்படுவார். அரசியலமைப்புச் சட்டத்திற்கு புறம்பாக ஆளுநர் செயல்பட முடியாது’ என்று கூறினார்.