அறிவியல் மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு

விஞ்ஞான பாரதி (VIBHA) அமைப்பு, விக்யான் பிரசார் மற்றும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலுடன் இணைந்து, பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் மனப்பான்மையை வளர்க்க ‘வித்யார்த்தி விக்ஞான் மந்தன்’ என்ற ஒரு போட்டித் தேர்வை ஏற்பாடு செய்துள்ளது.

இந்த ஆண்டின் கருப்பொருள் ஆச்சார்யா பிரபுல்லா சந்திர ரேவை அடிப்படையாகக் கொண்டது. அவர், ஒரு மிகச் சிறந்த வங்காள வேதியியலாளர், கல்வியாளர், வரலாற்றாசிரியர், தொழிலதிபர், வள்ளல் என பெயர் பெற்றவர். பாரதத்தில் முதல் நவீன வேதியியல் ஆராய்ச்சி பள்ளியை நிறுவியவர். பாரத ரசாயன அறிவியலின் தந்தை என்று கருதப்படுபவர்.

பாரதத்தின் மிகப்பெரிய ‘அறிவியல் திறமை தேடல்’ போட்டியான இதில், சி.பி.எஸ்.இ, ஐ.சி.எஸ்.இ மற்றும் மாநில கல்வி வாரியங்களின் கீழ் படிக்கும் 6ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியர் பங்கு பெறலம். இப்போட்டி என்.சி.இ.ஆர்.டியின் அறிவியல், கணித பாடப்புத்தகங்களின் பாடத்திட்டத்தை உள்ளடக்கியது.

வினாடி வினாவில் ஆச்சார்யா பிரபுல்லா சந்திர ரே, பாரத சுதந்திர போராட்டம், அறிவியல் சம்பந்தப்பட்ட கேள்வி பதில்கள் இடம் பெறும். தேர்வுகள், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஆங்கிலம், இந்தி, மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி, பெங்காலி, ஒடியா மற்றும் அசாமி உள்ளிட்ட மொழிகளில் நடத்தப்படும்.

இத்தேர்வுகள், 30 நவம்பர் 2021 மற்றும் 5 டிசம்பர் 2021ல் நடத்தப்படும். தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், தேசிய அறிவியல் ஆய்வகங்கள் மற்றும் மையங்களுக்குச் செல்லவும், நாட்டின் புகழ்பெற்ற விஞ்ஞானிகளுடன் தொடர்பு கொள்ளவும் வாய்ப்பு கிடைக்கும். மேலும் விவரங்களுக்கு https://science.newsbharati.com/Encyc/2021/9/2/-Vidyarthi-Vigyan-Manthan-.html என்ற இணையதளத்தை அணுகலாம்.