ஊழலுக்கு அடிபணிந்த முந்தைய அரசுகள்

‘கரிப் கல்யாண் சம்மேளனில்’ பங்கேற்பதற்காக ஹிமாச்சல பிரதேசம், சிம்லா சென்ற பிரதமர் நரேந்திர மோடி அங்கு உரையாற்றுகையில், ‘முன்பு எல்லாம்  மக்கள் ‘அட்கி லட்கி பட்கி’ (சிக்கிக்கொள்ளுதல், தொங்குதல், தடம் புரள்தல்) திட்டங்கள், நேபாட்டிசம், மோசடிகள் பற்றி பேசுவார்கள். ஆனால் காலம் மாறிவிட்டது. இன்று மக்கள் அரசின் திட்டங்களின் பலன்களைப் பற்றி பேசுகிறார்கள். இன்று பாரதத்தின் ஸ்டார்ட் அப்கள் உலக அளவில் பேசப்படுகின்றன. உலக வங்கி கூட பாரதத்தில் சுலபமான தொழில் துவங்குதல் பற்றி பேசுகிறது. 2014க்கு முன்னர் அரசாங்கம் ஊழலை அமைப்பின் இன்றியமையாத பகுதியாகக் கருதியது. ஊழலை எதிர்த்துப் போராடுவதற்குப் பதிலாக, அப்போதைய அரசு அதற்கு அடிபணிந்தது. திட்டங்களின் பணம் தேவைப்படுபவர்களைச் சென்றடைவதற்கு முன்பே எப்படிக் கொள்ளையடிக்கப்பட்டது என்பதை நாடே பார்த்தது. ஆனால், இன்று நிலைமை மாறிவிட்டது. பல்வேறு திட்டங்களின் பயனாளிகள் பட்டியலில் இருந்து ஒன்பது கோடி போலி பயனாளிகள் பெயர்களை அரசு நீக்கியுள்ளது. 2014க்கு முன்பு இருந்ததை விட நாட்டின் எல்லைகள் இப்போது மிகவும் பாதுகாப்பாக உள்ளன. இன்று நாம் சர்ஜிக்கல் ஸ்டிரைக், விமானத் தாக்குதல் குறித்து பெருமை கொள்கிறோம். வாக்கு வங்கி அரசியல் நம் நாட்டில் பல தசாப்தங்களாக உள்ளன. தனக்கென சொந்த வாக்கு வங்கியை உருவாக்கும் அவர்களின் அரசியல் நாட்டிற்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், நாங்கள்  வாக்கு வங்கியை உருவாக்குவதற்காக அல்ல, புதிய பாரதத்தை உருவாக்கவே பாடுபடுகிறோம்’ என கூறினார்.