30 ஆண்டுகளுக்கு பிறகு அரசியல் ஸ்திரத்தன்மை

‘உள்ளடக்கிய மற்றும் நீடித்த சர்வதேச வளர்ச்சிக்கான வழிகள் பாரத் 100’ என்ற கருப்பொருளின் அடிப்படையில் அசோசெம் வர்த்தக அமைப்பின் 2023ம் ஆண்டின் வருடாந்திர கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர், “தேச மக்கள் அனைவரும் தங்கள் பங்களிப்பை செலுத்தினால் மட்டுமே அனைத்துத் துறைகளிலும் பாரதம் தன்னிறைவு பெறும். 130 கோடி மக்கள் தொகை என்பது வளர்ச்சிக்கான இலக்கை அடைய தடையாக இருக்கும் என பலர் கருதுகின்றனர். ஆனால், ஒவ்வொரு மூலை முடுக்கிலும் சரியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால் தான், வளர்ச்சி சாத்தியமாகும். இதனைக் கருத்தில் கொண்டே மத்திய அரசு, மாநில அரசுகள், உள்ளாட்சி அமைப்புகள், நகராட்சி அமைப்புகள், கிராம பஞ்சாயத்துகள் என ஒருங்கிணைத்த நிர்வாக அமைப்பை உருவாக்கப்பட்டு உள்ளது. முழு அரசாங்க அணுகுமுறையின் அடிப்படையில் அடித்தளத்திலிருந்து வளர்ச்சிக்கான வேர்கள் ஊன்றபட்டிருக்கின்றன.

மாறுப்பட்ட சித்தாந்தங்கள் இருந்த போதிலும், பாரதத்தைஒரு குழுவாக இணைத்து தொலைநோக்கு பார்வையுடன் வழி நடத்துவதே வளர்ச்சிக்கு வித்திடும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் சீரிய கொள்கையால் பாரதம் கடந்த 9 ஆண்டுகளில் பல்வேறு சாதனைகளைப் படைத்திருக்கிறது. மோடி தலைமையில் அனைவரும் ஒன்றிணைந்து உழைப்போம் என்ற அணுகுமுறையில் பணியாற்றியதாலேயே மோசமான கொரோனா சூழ்நிலையை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடிந்தது. பெருந்தொற்று காலத்தை பாரதம் மட்டுமே மிகச்சிறப்பான முறையில் எதிர்கொண்டது என்பதை உலக நாடுகள் உணர்ந்திருக்கின்றன. நமது சித்தாந்தங்கள் பாரதத்தை பாதுகாப்பானதாக மாற்றியிருப்பதுடன், மத்திய அரசின் குறிப்பிட்ட சில திட்டங்கள், அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு வித்திட்டு இருக்கிறது. இந்த சாதனைகள் உலக நாடுகளுக்கு வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த 2022ல் யு.பி.ஐ வாயிலாக மொத்தம் ரூ.126 லட்சம் கோடி நிதி பரிமாற்றம் நடைபெற்றிருக்கிறது. பாரதத்தின் 99 சதவீத கிராமங்கள் மின்வசதி பெற்றிருக்கின்றன. நாட்டில் உள்ள 1.90 லட்சம் பஞ்சாயத்துக்கள் பாரத் நெட் இணையதள வசதிகள் மூலம் இணைக்கப்பட்டிருக்கின்றன. கடந்த 6 ஆண்டுகளில் 6 லட்சம் கிலோ மீட்டர் கண்ணாடி இழை பதிக்கப்பட்டு உள்ளது. 2014ல் 6.1 கோடியாக இருந்த அகண்ட அலைவரிசை இணைப்புகள் கடந்த 2022ம் ஆண்டு 82 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த 2014ம் ஆண்டு 91 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவை உள்ளடக்கியதாக இருந்த தேசிய நெடுஞ்சாலைகள், தற்போது 1.46 லட்சம் கிலோ மீட்டர் தொலைவை உள்ளடக்கியதாக மாறியிருக்கிறது. மத்திய அரசு உள்கட்டமைப்பு வசதிகளுக்கு ரூ. 100 லட்சம் கோடியை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. 30 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2014ம் ஆண்டு பிரதமர் மோடி பாரதத்தில் அரசியல் ஸ்திரத்தன்மையை உருவாக்கினார். கடந்த 10 ஆண்டுகள் பாரத வரலாற்றில் அரசியல் ஸ்திரத்தன்மை கொண்ட காலமாக இடம்பெற்றிருக்கிறது. கடந்த 2014ம் ஆண்டுக்கு முன்பாக, 60 கோடி மக்கள், வங்கி கணக்கு இல்லாமல் இருந்தனர். பிரதமர் மோடி தலைமையிலான அரசு கடந்த 9 ஆண்டுகளில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வங்கிக்கணக்கு வசதி உருவாக்கித் தரப்பட்டுள்ளது. அவ்வாறு தொடங்கப்பட்ட 48 கோடி வங்கி கணக்குகளில் 53 அமைச்சகங்களின் 310 திட்டங்களுக்கான மானியத் தொகையான ரூ. 24 லட்சம் கோடி நேரடியாக செலுத்தப்பட்டிருக்கிறது. இலக்கை அடைய அனைத்து வகைகளிலும் நாம் துணிச்சல் மற்றும் செயல்திறனுடன் செயல்பட வேண்டியது அவசியம்” என்று தெரிவித்தார்.