ஒயிட் பிரட் உடல் நலத்திற்கு உகந்ததல்ல

காய்ச்சல் போன்ற உடல் நலப் பிரச்சினைகளுக்கு ஒயிட் பிரட் போன்றவற்றை சாப்பிடுமாறு பரவலாகப் பரிந்துரைக் கிறார்கள். நடைமுறையிலும் இதை ஏராளமானோர் பின்பற்றுகிறார்கள். ஆனால், துரதிருஷ்டவசமாக ஒயிட் பிரட் நுகர்வு, உடல்நலத்திற்கு உகந்தது அல்ல என்னும் விழிப்புணர்வு இன்னும் மேலோங்காமலேயே இருக்கிறது.

ஒயிட் பிரட் உண்பதால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து சர்வதேச அளவில் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. 1 லட்சத்து 37 ஆயிரம் பேரிடம் கேள்வி கேட்டுப் பதிலைப்பெற்றனர். இந்த ஆய்வு ஒன்பதாண்டுகள் நடைபெற்றது. நன்கு தீட்டப்பட்ட தானியங்களால் ஆன உணவை தினந்தோறும் சுமார் 350 கிராம் அளவுக்கு ஒருவர் சாப்பிட்டு வந்தால் அவருக்கு இதய நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. நீரிழிவால் பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது.

ஒயிட் பிரட் உள்ளிட்டவற்றில் நாற்சத்து அறவே இல்லை. நார்ச்சத்து இருந்தால்தான் செரிமானம் செம்மையாக இருக்கும். நார்ச்சத்து இல்லையெனில் மலச்சிக்கல் ஏற்படும். வயிற்று உபாதை உக்ரமடையும். தீட்டப்படாத உணவு தானியங்களை சேர்த்துக்கொள்வது உடல்நலத்திற்கு நல்லது. எந்த அளவுக்கு உணவு தானியம் பாலிஷ் செய்யப்படுகிறதோ அந்த அளவுக்கு அது உடல்நலத்திற்கு ஊறு விளைவிக்கிறது. சமீபகாலமாக பாரதத்தில் இதயக் கோளாறு அதிகரித்து வருகிறது என்பதை புள்ளிவிவரம் வெளிச்சப்படுத்தியுள்ளது.

ஆசியாவைச் சேர்ந்தவர்கள் குறிப்பாக பாரதமக்களுக்கு ரத்த ஓட்டம் தடைபடுவது சர்வசாதாரண நிகழ்வாக உள்ளது. இதற்கு தவறான உணவு நுகர்வு மட்டுமல்லாமல், பூகோள, தட்பவெப்ப ரீதியான காரணங்களும் வழிவகுக்கின்றன. இதைப்போல, அதிக உடல் எடை கொண்டவர்களாகவும் பாரத மக்கள் உள்ளனர். இதற்கு உடல் உழைப்பு அல்லது தேகப்பயிற்சி இல்லாததும் ஒரு காரணம். வயிற்றுப்பகுதியிலும் கல்லீரலிலும் அளவுக்கதிகமான கொழுப்பு சேருவதால் பொதுவான ஆரோக்கியம் சீர்குலைகிறது.

இந்த அறிவியல்ரீதியான உண்மைகளை யெல்லாம் உள்வாங்கிக்கொண்டு ஒயிட் பிரட் உள்ளிட்ட உணவு வகைகள் மீதான மோகத்தை விட்டொழிக்கவேண்டும். ஒயிட் பிரட்டில் கார்போஹைட்ரேட் மட்டுமே உள்ளது. இதைத் தொடர்ந்து உட்கொண்டால் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது என்றபோதிலும், மகளிருக்கே பெரும் பாதிப்பு ஏற்படுகிறது என்பதையும் ஆய்வு புலப்படுத்தியுள்ளது.

இதைத் தவறாமல் சாப்பிட்டு வரும் பெண்களுக்கு மனோரீதியான குழப்பங்கள் ஏற்படுகின்றன. அவர்கள் நிஜத்தையும் நிழலையும் பிரித்து அறியமுடியாத நிலைக்குத் தள்ளப் படுகிறார்கள். எப்போதாவது ஒருமுறை பிரட்டை சாப்பிட்டால் பெரும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை. ஆனால் இதை அடிக்கடி சாப்பிடுவதை வழக்கமாக்கிக்கொண்டால் அது சொந்தக் காசிலேயே சூனியம் வைத்துக் கொள்வதற்கு சமமாகிவிடும் என்று அறிவியல் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.