பெட்ரோல் குண்டு வீச்சு

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மேலக்காவிரி பகுதியைச் சேர்ந்தவர் சக்கரபாணி. இந்து முன்னணி அமைப்பின் நிர்வாகியான இவர், கடந்த 2017 முதல் தஞ்சாவூர் மாநகரச் செயலாளராக இருந்து வருகிறார். ஞாயிற்றுக்கிழமை இரவு அவர் தனது மனைவி, மகனுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த நிலையில், அதிகாலையில் வீட்டின் முன்பு திடீரென ஏதோ வெடிக்கும் சத்தம் கேட்டது. எழுந்து வந்து பார்த்தபோது அங்கு, திரியுடன் கூடிய பெட்ரோல் பாட்டில் ஒன்று உடைந்து கிடந்தது. இதையடுத்து, கும்பகோணம் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை செய்தனர். வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. தகவலறிந்த இந்து முன்னணி நிர்வாகிகளும், தொண்டர்களும் சக்கரபாணி வீட்டின் முன்பு திரண்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முஸ்லிம் அடிப்படைவாத அமைப்பான பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ.) கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசால் தடை செய்யப்பட்டது. இதனையடுத்துஅந்த அமைப்பினர், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., விஷ்வ ஹிந்து பரிஷத், இந்து முன்னணி உள்ளிட்ட ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்களின் வீடுகளில் பெட்ரோல் குண்டுகளை வீசினர். இது தொடர்பாக பி.எப்.ஐ அமைப்பைச் சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.