அனைவருக்கும் ஓய்வூதியம்

வயதான காலத்தில் நிம்மதியான வாழ்க்கை வாழ பென்ஷன் எனும் ‘நிச்சய வருமானம்’ மிகுந்த பலன் அளிக்கும். பென்ஷன் என்றால் வேலைக்குச் செல்பவர்களுக்கு மட்டும்தான் கிடைக்கும் என்ற நிலை முன்பு இருந்தது. தற்போது சுயதொழில் புரியும் நபர்கள் உட்பட அனைத்து தரப்பு மக்களுக்கும் பென்ஷன் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் ‘சரல் பென்ஷன் யோஜனா’ என்ற ஒரு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

‘சரல் பென்ஷன் யோஜனா’ திட்டத்தை இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐ.ஆர்.டி.ஏ.ஐ) வழியாக செயல்படுத்தப்படுகிறது. 2021 ஏப்ரல் 1 முதல் அறிமுகமாக இருக்கும் இந்த திட்டத்தில் இணைய விரும்புவோர் குறைந்தபட்சம் மாதம் ரூ. 1,000 ரூபாய் பிரீமியம் செலுத்த வேண்டும். இந்தத் தொகையை மாதாந்தர தவணை, மூன்று மாதத்திற்கு ஒரு முறை, ஆறு மாதத்திற்கு ஒரு முறை, வருடத்திற்கு ஒரு முறை என விருப்பப்படும் விதத்தில் செலுத்தலாம். எவ்வளவு அதிகமாக பிரீமியம் செலுத்துகிறோமோ அந்த அளவுக்கு பென்ஷன் பணம் கிடைக்கும். 40 முதல் 80 வயது உடைய அனைவரும் இதில் இணையலாம்.

இந்தத் திட்டத்தில் ஒருவர் சேர்ந்த ஆறு மாத காலத்தில் தமது திட்டத்தை சரண்டர் செய்தும் பென்ஷன் தொகையைப் பெற முடியும்.  ஒருவர் ஒருமுறை ரூ.10 லட்சம் ப்ரீமியமாகச் செலுத்திவிட்டால் மாதம் ரூ. 5,000 வரை பென்ஷன் வழங்கப்படும். ‘சிங்கிள் லைஃப் ஆனுட்டி’ திட்டத்தில் பாலிசிதாரரின் இறப்புக்கு பிறகு ரூ. 10 லட்சம் வாரிசுதாரருக்கு வழங்கப்படும்.

‘ஜாயின்ட் லைஃப் ஆனுட்டி’ திட்டத்தில் பாலிசிதாரரின் இறப்புக்கு பிறகு ரூ. 5,000 பென்ஷன் அவரது வாரிசுதாரருக்கு வழங்கப்படும். வாரிசுதாரரின் இறப்புக்குப் பிறகு ரூ. 10 லட்சம் அவர்களின் சட்டபூர்வ வாரிசுதாரரிடம் கொடுக்கப்படும். பணத்துக்கு பாதுகாப்பு, வளர்ச்சி, முதலீட்டுத் தொகைக்கு, பென்ஷன் பெறும் காலம் வரை வருமான வரி விலக்கு, பென்ஷன் காலத்தில் வேறு வருமானம் இல்லை என்றால் முழு வருமான வரி விலக்கு போன்ற பல நன்மைகளும் இதில் உண்டு.