பன்னோக்கு சரக்குப் போக்குவரத்துப் பூங்கா

பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின்கீழ், நாடு முழுவதும் நவீன பன்னோக்கு சரக்குப் போக்குவரத்துப் பூங்காவிற்கான முத்தரப்பு ஒப்பந்தத்தில், மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, சர்பானந்த சோனோவால்,  மற்றும் வி.கே.சிங் ஆகியோர் கையெழுத்திட்டனர். விரைவான மேம்பாடு, சரக்கு ஒருங்கிணைப்பை மையப்படுத்துதல், சர்வதேச தரத்துக்கு இணையாக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 14 சதவீதத்திலிருந்து 10 சதவீதத்துக்கும் கீழ் தளவாட செலவுகளை குறைத்தல் உள்ளிட்ட நோக்கங்களுடன் இந்த பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பூங்காவில், ரயில் மற்றும் சாலைகளில் சரக்குகளை கையாளும் வசதி, கொள்கலன் முனையங்கள், சரக்கு முனையங்கள், கிடங்குகள், குளிர் சேமிப்பு அறைகள், இயந்திர மயமாக்கப்பட்ட பொருட்களை கையாள்வதற்கான வசதிகள், மதிப்புக் கூட்டப்பட்ட சேவையான சேமிப்பு வசதிகள், கிடங்கு மேலாண்மை, சோதனை செய்யும் வசதி மற்றும் சுங்க அனுமதி பெறுதல் உள்ளிட்ட அனைத்தும் இடம் பெற்றுள்ளன. இந்த ஒப்பந்தத்தை வரவேற்று பேசிய அமைச்சர் நிதின் கட்கரி, “ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. இது தடையற்ற மாற்றங்களை ஏற்படுத்தும். நவீன பன்னோக்கு சரக்குப் போக்குவரத்துப் பூங்கா, சரக்குகள் மாற்றப்படுவதை உறுதி செய்யும். இது கதி சக்தி திட்டத்தின் மூலம் நாட்டை முன்னேற்றும்” என தெரிவித்தார். “நாடு முழுவதும் விரைவான, திறமையான பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கேற்ற தளவாட இயக்கங்களுக்காக, பாரத்மாலா பரியோஜனாவின் பரிந்துரை மற்றும் முயற்சியை நடைமுறைப்படுத்த முன்மொழிவதற்கான வரலாற்று தருணம் இது. தளவாட இயக்கத்தின் சிக்கல்களை களைந்து, பொருளாதாரத்தை வேகமான வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லவும், தளவாடத் துறைகளை உயிர்ப்பிக்கவும் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது” என்று சர்பானந்த சோனோவால் கூறினார்.