கிருஷ்ண ஜென்மபூமி வழக்கை விசாரிக்க உத்தரவு

அலகாபாத் உயர்நீதிமன்றம், ஸ்ரீ கிருஷ்ண ஜென்மபூமி ஷாஹி இத்கா மசூதி நிலத் தகராறு வழக்கை, கடந்த ஆண்டு மே 19ம் தேதி மாவட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ள முடிவுகள் அல்லது கருத்துகளால் பாதிக்கப்படாமல், மதுரா நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று தனது உத்தரவில் தெரிவித்துள்ளது. முன்னதாக, சில ஹிந்து பக்தர்கள் மதுராவின் சிவில் நீதிமன்றத்தில் 25 செப்டம்பர் 2020 அன்று சிவில் வழக்கைத் தாக்கல் செய்தனர். அதில், ஸ்ரீ கிருஷ்ண ஜென்மபூமி (கிருஷ்ணர் பிறந்த இடம்) என்று ஹிந்துக்களால் நம்பப்படும் கத்ரா கேசவ் தேவ் கோயிலுக்கு அருகில் உள்ள 13.37 ஏக்கர் சொத்துக்கு உரிமை கோரப்பட்டது. மேலும், அந்தச் சொத்தில் உள்ள சர்ச்சைக்குரிய ஒரு கட்டமைப்பை அகற்றவும் கோரியது. ஆனால், சிவில் நீதிபதி, இந்த வழக்கை சமர்ப்பிக்கும் போது அதை சிவில் வழக்காகப் பதிவு செய்யவில்லை, மேலும் இதில் சம்பந்தப்பட்ட வாதிகள், மதுராவில் வசிப்பவர்கள் இல்லை என்ற காரணத்திற்காக அதை ஒரு இதர வழக்காகப் பதிவு செய்தார். 30 மே 2020 அன்று நீதிமன்றம் இந்த வழக்கை தள்ளுபடி செய்தது, எதிர்மனுதாரர்கள் பக்தர்கள், வழிபாட்டாளர்கள் என்றும், வழக்கைத் தாக்கல் செய்ய அனுமதிப்பது சமூக மற்றும் நீதித்துறை அமைப்பைச் சீர்குலைக்கும் என்றும் அவர்களுக்கு வழக்குத் தொடர உரிமை இல்லை என்று நீதிமன்றம் கூறியது. இந்த தீர்ப்பை எதிர்த்து மதுரா மாவட்ட நீதிபதி நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஜனவரி 2021ல், மாவட்ட நீதிபதி 30 செப்டம்பர் 2020 அன்று சிவில் நீதிபதியின் உத்தரவை உத்தரவு 7 விதி 11 சி.பி.சியின் கீழ் ஒரு உத்தரவாகக் கருத முடியாது, எனவே மேல்முறையீட்டை ஏற்க முடியாது என்று கூறி, இந்த மேல்முறையீட்டை சீராய்வு மனுவாக பதிவு செய்ய நீதிபதி உத்தரவிட்டார். இதனிடையே, உத்தரப் பிரதேச சன்னி மத்திய வக்ஃப் வாரியமும், ஷாஹி மஸ்ஜித் இத்கா நிர்வாகக் குழுவும் இந்த விவகாரத்தில் “பரந்த தாக்கங்கள்” இருப்பதாகக் கூறி, உயர் நீதிமன்றத்தை அணுகின. இந்த இரு மனுக்களையும் நீதிபதி பிரகாஷ் பாடியா தள்ளுபடி செய்தார்.