பாகிஸ்தான் குறித்து நார்வே எச்சரிக்கை

பாகிஸ்தான், கல்வி, ஆரோக்கியம் போன்ற காரணங்களை சாக்காக காட்டி அணுசக்தி தொழில்நுட்பத்தைப் பெறுவதில் அனைத்து சர்வதேச பாதுகாப்பு நடைமுறைகளையும் மீறியுள்ளது. அது இந்த தொழில் நுட்பத்தை பயங்கரவாத செயல்களுக்கு பயன்படுத்தலாம். இது பாரதத்திற்கு மட்டுமல்ல உலகிற்கே பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என நார்வே எச்சரித்துள்ளது. அணு சக்தி சம்பந்தமான முக்கிய தொழில்நுட்பங்களை பாகிஸ்தான் பெறுவது குறித்து கவலை கொள்வது நார்வே மட்டுமல்ல. பாரதத்திற்கு எதிராக பாகிஸ்தான் பேரழிவு ஆயுதங்களுக்கான (WMD) தொழில்நுட்பத்தை நாடியது, அணு ஆயுதங்கள் பற்றிய தகவல்களையும் பொருட்களையும் திருட முயன்றது குறித்து 2020ல் ஜெர்மன் நாடு விரிவாக அறிக்கை வெளியிட்டுள்ளது. செக் குடியரசு தனது 2019 க்கான பாதுகாப்பு தகவல் சேவையின் வருடாந்திர அறிக்கையில் இதே போன்ற கருத்தை முன் வைத்தது. 2019 ல் அமெரிக்க நீதித்துறை, பாகிஸ்தானை தளமாகக் கொண்டு செயல்படும் ஒரு முன்னணி நிறுவனத்தின் ஐந்து நபர்கள் பாகிஸ்தானுக்கு அமெரிக்க அணு மூலப்பொருட்களை சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்ய முயன்றதாக குற்றம் சாட்டியது.