தேசிய இளைஞர் விழா இலச்சினை

புதுச்சேரியில் வரும் 12ம் தேதி முதல் 16ம் தேதி வரை நடைபெறவுள்ள தேசிய இளைஞர் விழா 2022’க்கான இலச்சினை புதுச்சேரியில் இன்று வெளியிடப்பட்டது. மத்திய தகவல் ஒலிபரப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் முன்னிலையில், புதுச்சேரி யூனியன் பிரதேசத் துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் இலச்சினையை வெளியிட்டார். இதில் உரையற்றிய அமைச்சர், ‘இந்த ஆண்டுக்கான தேசிய இளைஞர் விழாவை நடத்துவதற்கு  புதுச்சேரியை பிரதமர் மோடியே தேர்வு செய்திருப்பதும் ஜனவரி 12ல் இதன் துவக்க விழாவில் அவர் பங்கேற்க இருப்பதும் நமக்கு வரலாற்றுச் சிறப்புமிக்கத் தருணம். சுதந்திரமடைந்த 75வருட அமிர்த மகோத்சவத்தில், சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான இளைஞர் தின விழாவின் வெள்ளி விழா, மகாகவி பாரதியார் மறைந்த நூற்றாண்டு, ஸ்ரீ அரவிந்தரின் 150வது பிறந்த நாள் ஆகியவை இந்த தேசிய விழாவில் சங்கமிக்கின்றன. வெளியுலகிற்கு தெரியாத விடுதலைப் போராட்ட வீரர்களை இளைஞர்களுக்கு அறிமுகப்படுத்தும் விழாவாக இது அமையும். நாடு முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான திறமை மிக்க இளைஞர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்த உள்ளனர். இளைஞர்கள் திறமையானவர்களாகவும், வலுவானவர்களாகவும் இருந்தால்தான் நாடு முன்னேறும். 21ம் நூற்றாண்டில் பாரதத்தை உலகமே உற்று நோக்குகிறது. தமது திறமையை, தகுதியை நிரூபிப்பதில் இளைஞர்களின் பங்கு முக்கியமானது. உள்ளூர் மக்கள் அனைவரும் இதில் கலந்து கொள்ள வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில், புதுச்சேரி முதலமைச்சர் என் ரங்கசாமி, கல்வி அமைச்சர் நமச்சிவாயம், சட்டப்பேரவைத் தலைவர் ஏம்பலம் செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.