சிறையில் குடும்பம் நடத்திய எம்.எல்.ஏ

உத்தரப் பிரதேசத்தில் உள்ள குற்றப் பின்னணி கொண்ட அரசியல்வாதிகளில் ஒருவர் முக்தார் அன்சாரி. அவர் மீது 30 வழக்குகள் உள்ளன. முக்தாரின் ரூ. 400 கோடி மதிப்புள்ள ஆக்கிரமிப்பு சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டும் சட்டவிரோத கட்டடங்கள் இடிக்கப்பட்டும் உள்ளன. இவரது இரண்டு மகன்களில் மூத்தவரான அப்பாஸ் அன்சாரியும் தந்தைக்கு ஏற்ற தனையனாக குற்றப் பின்னணி கொண்ட அரசியல்வாதியாக உள்ளார். இவர், மாவ் தொகுதியில் பாரதிய சுஹல்தேவ் சமாஜ்வாதி கட்சி சட்டமன்ற உறுப்பினரான இவர், ஹவாலா பணப் பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த ஆண்டு நவம்பர் 18ம் தேதி சித்ரகுட் சிறைக்கு மாற்றப்பட்டார். அப்பாஸின் மனைவியான நிக்கத் பானு, தனது கணவர் அப்பாஸுடன் சித்ரகுட் சிறையில் தினமும் பகல் பொழுதுகளில் தங்கி குடும்பம் நடத்தி வந்துள்ளார். ஆனால், இவரது வருகை சிறை பார்வையாளர் பதிவேட்டில் பதியப்படவில்லை. இவர்களது சந்திப்பு சிறை கண்காணிப்பாளர் அசோக் சாகரின் அலுவலக அறையில் நடைபெற்று வந்தது. இந்த தகவலை அறிந்த சித்ரகுட் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிருந்தா சுக்லா, அவர்களை பிடிக்க முடிவு செய்தார். சித்தரகுட் ஆட்சியர் அபிஷேக் ஆனந்துடன் இதற்காக திட்டம் தீட்டி ரகசியமாக தனியார் வாகனத்தில் வந்து திடீர் சோதனை நடத்தினார். அப்போது கைதி அப்பாஸின் அறை எத்ரிபார்த்தது போலவே காலியாக இருந்தது. சிறையின் அனைத்து அதிகாரிகளையும் தம்முடன் வந்த காவல் படையால் முடக்கிவிட்டு, சிறை கண்காணிப்பாளர் அசோக்கின் அலுவலக அறைக்கு சென்றார். அந்த அறை உள்பக்கம் தாழிடப்பட்டு இருந்தது. அறையில் தனது மனைவியுடன் இருந்த அப்பாஸ் கையும் களவுமாக சிக்கினார். அவர்களிடம் இருந்த இரண்டு கைப்பேசிகள், பல லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டன. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அப்பாஸ் கடந்த ஒன்றரை மாதமாக மனைவி நிக்கத்துடன் அந்த அறையில் தங்கியிருந்துள்ளார், தனது மனைவியின் கைப்பேசிகள் மூலம் தனது வழக்குகளின் சாட்சிகளையும் மிரட்டி வந்துள்ளார். சிறையில் இருந்தவாறே மிரட்டி பணம் பறிப்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டு வந்துள்ளார் என தெரியவந்துள்ளது. இதனையடுத்து, சட்டவிரோதமாக சிறையில் தனது கணவருடன் தங்கியிருந்த நிக்கத் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அப்பாஸுக்கு உதவிய சிறை அதிகாரிகள் எட்டு பேர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்பாஸ் உடனடியாக வேறு சிறைக்கு மாற்றப்பட்டார். அவரது சிறை வழக்கு உ.பி அதிரடிப் படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.