தியாகச்சுடர் பிபின் சந்திரபால்

அன்றைய ஒன்றிணைந்த பாரதத்தில், இன்றைய வங்கதேசத்தின் போய்ல் என்ற கிராமத்தில் பிறந்தவர் பிபின் சந்திர பால். பட்டப்படிப்பை பாதியிலேயே கைவிட்டவர். ஆனாலும் ஆசிரியர், நல்ல பத்திரிகையாளர், சிறந்த சொற்பொழிவாளர், நூலகர், எழுத்தாளர் என பன்முகத் திறமை கொண்டவர். இவர், ‘வந்தே மாதரம்’ என்ற பத்திரிகையையும் நடத்தினார். தீவிர முற்போக்குவாதி. கணவனை இழந்த பெண்ணை மணப்பதற்காக தன் குடும்பத்தையே பிரிந்து வந்தார். இவரது எழுத்துகள் நாடு முழுவதும் சுதந்திர வேட்கையைப் பரப்பின. ஒரு பத்திரிகையாளர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தார்.

விடுதலை இயக்கத்தின் மும்மூர்த்திகள் ‘லால், பால், பால்’ என்பார்கள். அது லாலா லஜபதிராய், பாலகங்காதரத் திலகர், பிபின் சந்திர பால் ஆகியோரையே குறிக்கும். அந்நிய துணி எரிப்பு, அந்நியப் பொருள் புறக்கணிப்பு, சுதேசி இயக்கம் போன்ற அன்றைய வெள்ளையர் எதிர்ப்புப் போராட்டங்கள் இவரது சிந்தனையில் விளைந்தவையே. ஆங்கிலேயரின் பிரித்தாளும் சூழ்ச்சியை உணர்ந்த இவர், நாடு முழுவதும் எழுச்சிமிகு உரை நிகழ்த்தி வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடினார். சுதேசி பொருட்களைப் பயன்படுத்துவதால் மட்டுமே வறுமையையும், வேலையில்லாத் திண்டாட்டத்தையும் ஒழிக்கலாம் என்றார்.

1908-ம் ஆண்டு முதல் 1911 வரை நாடு கடத்தப்பட்டார். லண்டன் இந்தியா ஹவுஸில் தலைமறைவாக இருந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வ.வே.சுப்பிரமணியம் ஐயர், வீர சாவர்க்கர், மதன்லால் திங்ரா ஆகியோருடன் இணைந்து செயல்பட்டார். அங்கிருந்தபடியே ஸ்வராஜ் இதழை வெளியிட்டு நடத்தினார். ‘புரட்சிக் கருத்துக்களின் தந்தை’ என்று அழைக்கப்படும் இவர், அன்று முதல் இன்றுவரை தொடரும் காங்கிரஸ் கட்சியின் விட்டுக்கொடுக்கும் கொள்கைகள் பிடிக்காமல் போனதால் அரசியலை விட்டு விலகினார். உள்நாட்டுத் தொழில்களை ஆதரிக்க வேண்டும். புதிய தொழில்களை நம் நாட்டவர்களே தொடங்க வேண்டும். நமது கலாச்சாரம், வரலாறு, தத்துவம், கணிதம், அறிவியல் ஆகியவற்றைக் கற்பிக்கும் தேசியக் கல்வி முறைக்கான பள்ளிகள் நிறுவப்பட வேண்டும்’ என்பதை பிபின் சந்திரபால் மேடைகள் தோறும் முழங்கினார். பாரதியாரின் அழைப்பை ஏற்று, சென்னைக்கு வந்து 1907ல் சுதந்திரப் போராட்ட பிரச்சாரம் செய்தார்.

ஆங்கிலேயரின் பொருளாதார வலிமை ஆட்டம் கண்டால், ஆட்சி தானாகவே முடிவுக்கு வரும் என வலியுறுத்தினார். தேசியக் கல்வி மூலம் இளம் உள்ளங்களில் எளிதாக நாட்டுப்பற்றைப் பதியச் செய்யலாம் என்பது இவரது அசைக்க முடியாத நம்பிக்கை. இலக்கியத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். கீதை, உபநிடதங்களை ஆழ்ந்து கற்றார். இந்திய தேசியம், இந்தியாவின் ஆன்மா உட்பட பல நூல்களை எழுதியுள்ளார்.

இன்றைக்கு நம் தேச முன்னேற்றத்திற்கு நாம் சொல்லும் ‘தேசியக் கல்விக் கொள்கை, மேக் இன் இந்தியா, சுதேசி பொருட்கள் பயன்பாடு, தேசப்பற்று’ போன்றவற்றை எல்லாம் அன்றே சொன்னவர் இந்த சுதந்திரப் போராளி. இவர் தனது 74-வது வயதில் காலமானார்.

பிபின் சந்திரபாலின் நினைவு தினம் இன்று

 

ஜெ.எஸ். ஸ்ரீதரன்