தொழில்துறையினர் கதவடைப்பு போராட்டம்

தமிழ்நாடு சிறு, குறு தொழில்கள் சங்கத்தின் (டான்ஸ்டியா) மாநில தலைவர் மாரியப்பன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கடந்த 8 ஆண்டு காலம் மின்சார கட்டணத்தை உயர்த்தாமல் தற்போது கடுமையாக உயர்த்தியுள்ளனர். தொழில் நடத்தினாலும், நடத்தாவிட்டாலும் மின்சார கட்டணத்தை செலுத்தும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. பீக் ஹவர்’ 3 மணி நேரம் என்பதை 8 மணி நேரமாக உயர்த்திவிட்டனர். சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் இலவச மின்சாரத்தை கேட்கவில்லை. ஆனால், தங்களால் முடிந்த அளவு செலுத்தும் வகையில் மின்கட்டணத்தை நியாயமாக நிர்ணயிக்கவும் அதிகப்படியான கட்டணத்தை குறைக்கவுமே கேட்கிறோம். மேலும், தமிழகத்தில் உள்ள 130 சிட்கோ தொழிற்பேட்டைகளில் 24 தொழிற்பேட்டைகளுக்கு 99 ஆண்டு குத்தகை முறையை ரத்து செய்ய வேண்டும். நில மனைகளை விற்பனை பத்திரமாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தியும் இந்த வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும். கோவையில் கொடிசியா தவிர, 22 அமைப்புகள் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பங்கேற்கின்றன. அவ்வகையில் தமிழகம் முழுவதும் 150 அமைப்புகள் இந்த ஒரு நாள் கதவடைப்பு போராட்டத்தில் பங்கேற்க உள்ளன. எங்கள் கோரிக்கைகள் தொடர்பாக தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை நேரில் சந்தித்து பலமுறை பேசிவிட்டோம். ஆனால், அவர் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கைகளை இதுவரை எடுக்கவில்லை” என்று கூறியுள்ளார்.