இலங்கை தமிழர்கள் மோடிக்கு கடிதம்

இலங்கை அரசியலமைப்பின் 13வது சட்டத் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு இலங்கை அரசிற்கு அழுத்தம் அளிக்க வேண்டும். இலங்கை அரசு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்த வேண்டும் என கோரி இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் அரசியல்வாதிகள் பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். கொழும்பில் உள்ள பாரத தூதர் கோபால் பாக்லேவை சந்தித்து இந்த  உதவிக் கோரும் கடிதத்தை அளித்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் தலைமையில், மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தாத்தன், செல்வம் அடைக்கலநாதன், வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் இக்கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.