தி.மு.கவின் வாக்குறுதிகளை நிறைவேற்ற வைப்போம்

ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர், “தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த 22 மாதங்களில் இதுவரை மக்களின் பிரச்னைகளை தீர்க்க தி.மு.க அரசு முன்வரவில்லை. மாறாக தினந்தோறும் ஏதாவது பிரச்னைகளில் தான் அரசு சிக்கிக் கொண்டு வருகிறது. மக்களுக்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எதையும் எடுக்கவில்லை. இந்த இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு 33 வார்டுகளுக்கு 30 அமைச்சர்களை நியமித்து காலையில் இருந்து இரவு வரை மக்களை எப்படி ஏமாற்றுவது, அவர்களின் வாக்குகளை எப்படி பெறுவது என்பது குறித்த சிந்தனையில் தான் அவர்கள் உள்ளனர். நாங்கள் இங்கு வந்ததற்கு முக்கிய காரணம், தென்னரசு இங்கு வெற்றி பெறுவதன் மூலம் ஆட்சி மாற்றம் எதுவும் வந்து விடப்போவதில்லை. ஆனால் தென்னரசுவை வெற்றி பெறச் செய்தால், தி.மு.க தேர்தல் காலத்தில் அளித்த முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வைக்க முடியும். குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 உரிமைத்தொகை, எரிவாயு சிலிண்டருக்கு மாதம் ரூ.100 வீதம் மானியம் கொடுப்பதாகக் கூறி விட்டு அதை நிறைவேற்றாமலும் இருக்கின்றனர். அதன்படி இந்த நிலுவைத்தொகையான ரூ. 24,200’ஐ உங்கள் வங்கிக் கணக்கில் தி.மு.கவை செலுத்த வைக்க முடியும். ஈரோடு கிழக்கு தொகுதியில் மட்டும் 1.21 லட்சம் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு மட்டுமின்றி தமிழகம் முழுவதும் எரிவாயு இணைப்புகளுக்கும் மானியத் தொகையை வழங்குவதாக தி.மு.க அறிவித்து விடும்.

கடந்த தேர்தலில் 517 வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு அதில் வெறும் 49 வாக்குறுதிகளை மட்டுமே தி.மு.க. அரசு நிறைவேற்றியுள்ளது. இங்கு தேர்தல் பணியாற்றி வரும் சாராய அமைச்சர் கொடுக்கும் பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள். அது உங்கள் பணம், வேறொரு ரூபத்தில் வருகிறது. ஆனால் வாக்குகளை மட்டும் அ.தி.மு.கவுக்கு அளியுங்கள். இந்தத் தொகுதியில் நெசவாளர்கள் அதிகம் உள்ளனர். 1,000 யூனிட் மின்சாரத்தை இலவசமாக அளிப்பதாக வாக்குறுதியில் கூறி விட்டு இப்போது மின்கட்டணத்தை 80 சதவீதம் உயர்த்தி விட்டனர். இதுபோன்ற நடவடிக்கைகளால் நெசவுத் தொழில் செய்பவர்களால் எப்படி தொழிலை செய்ய முடியும்? இந்த தேர்தல் வந்த பிறகு, 1,000 யூனிட் மின்சாரத்தை இலவசமாக வழங்குகிறோம் என்று கூறுகிறார்கள். அப்படியெனில், இதுவரையிலும் முதல்வர் கோமாவில் இருந்தாரா? யாருக்கும் எதுவும் செய்யாமல், வெறும் பொய்யை மட்டும் பேசி, மக்களின் வாக்குகளை விலை கொடுத்து வாங்கி விடலாம் என்று தி.மு.க. கருதுகிறது. தி.மு.க. ஆட்சிக்கு எப்போது வந்தாலும் மிரட்டி மாமூல் வசூலிப்பது, பிரியாணி கடையில் ஓசியில் சாப்பிடுவது போன்றவற்றில் ஈடுபடுவது தான் அதிகம். 5 ஆண்டுக்கு முன் விருகம்பாக்கத்தில் ஒரு பிரியாணி கடையில் சாப்பிட்டதற்கு பணம் கேட்டவர்களை தி.மு.க.வினர் தாக்கினர். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று மன்னிப்பு கேட்டார். ஆனால், இப்போது முதல்வராக இருக்கும்போது, கிருஷ்ணகிரியில் ராணுவ வீரர் ஒருவரை, தி.மு.க கவுன்சிலர் ஒருவர் அடித்து கொலை செய்து விட்டார். இதைப்பற்றி ஸ்டாலின் இதுவரை வாயைத் திறக்கவில்லை.

திருமங்கலம் தேர்தலில், மு.க. அழகிரி ரூபாய் நோட்டுகளை அள்ளி வீசி தேர்தலில் வெற்றி பெற்றார். அரவக்குறிச்சியில் பணத்தை வாரியிறைத்ததால் தேர்தலை நிறுத்தி வைத்து அவப்பெயர் ஏற்பட்டது. அதேபோல ஈரோடு கிழக்கு தொகுதியும் ஒரு அவப்பெயரை சம்பாதித்து கொண்டிருக்கிறது. இந்த அவப்பெயர் ஏற்பட நாம் விடக்கூடாது. அதற்காக தென்னரசுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும். தேர்தலுக்காகவே ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஈரோடு வந்துள்ளார். உங்கள் வாக்கின் மை காய்வதற்கு முன் அவர் சென்னைக்கு சென்று விடுவார். அவர் ஏழைகளுக்கு சேவை செய்பவர் இல்லை. இளையராஜாவுக்கு ராஜ்யசபா எம்.பி பதவி. வழங்கிய போது அவரின் சாதியை சொல்லி தரக்குறைவாக திட்டியவர் இளங்கோவன். ஜெயலலிதாவை தரக்குறைவாக விமர்சித்தவர். ஒருகாலத்தில் வைகோவையும் மோசமாக விமர்சனம் செய்தவர். எனவே தரமான வேட்பாளரான தென்னரசுவை ஆதரித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என கூறினார்.