வளர்ந்த நாடாக மாற்ற உறுதியேற்போம்

‘ரோஜ்கர் மேளா’ எனும் வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் 71,056 பேருக்கு வேலைவாய்ப்புக்கான கடிதத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று வழங்கினார். அப்போது காணொலி காட்சி வாயிலாக அவர்களிடம் பேசிய மோடி, “நீங்கள் அனைவரும் மத்திய அரசின் பிரதிநிதிகளாக பணியாற்றப் போகிறீர்கள். உங்களுக்கு மிகப் பெரிய பொறுப்பு காத்திருக்கிறது. உங்களுக்கான இந்த வாய்ப்பு ஒரு சிறப்பான தருணத்தில் கிடைத்துள்ளது. நாட்டின் அமிர்த காலத்தில் உங்களுக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. அடுத்த 25 ஆண்டுகளில் பாரதத்தை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்று நாட்டு மக்களாகிய நாம் உறுதி எடுத்திருக்கிறோம். இதை அடைவதற்கு நீங்கள் அனைவரும் சாரதியாக மாறப்போகிறீர்கள். கொரோனா பெருந்தொற்று, உக்ரைன் – ரஷ்யா போர் போன்ற காரணங்களால் உலகின் பல பகுதிகளில் இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்காத சூழல் நிலவுகிறது. வளர்ந்த நாடுகளிலும்கூட இந்த நெருக்கடி இருப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆனால், இதே காலகட்டத்தில் பாரதம் மகத்தானதாக மாறி இருக்கிறது. பாரதத்தின் பொருளாதாரம் மிகப் பெரிய வளர்ச்சி பெறப்போகிறது, புதிய வாய்ப்புகள் அதிகரிக்கப்போகிறது என்று பொருளாதார அறிஞர்கள் கூறுகிறார்கள். இந்த வாய்ப்பை பயன்படுத்தி பாரதத்தை வளர்ந்த நாடாக மாற்ற இளைஞர்கள் உறுதி ஏற்க வேண்டும்” என கூறினார். பிறகு, வேலைவாய்ப்புக் கடிதம் பெற்று பணியில் சேர்வோருக்கு ஆன்லைன் முறையில் கர்மயோகி ப்ராரம்ப் திட்டம் எனும் திட்டத்தின் கீழ், அவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக இதனையும் தொடங்கி வைத்தார்.