சிறுத்தைகள் புலம்பல்

திருவாரூர் மாவட்டம் தெற்கு ரத வீதியின் பெயரை கருணாநிதி சாலை என மாற்றும் முயற்சியை எதிர்த்து பா.ஜ.க சார்பில் நடந்த பிரம்மாண்டமான ஆர்ப்பாட்டத்தின்போது, பல ஆயிரம் பேர் ஒரே வீதியில் குவிந்தது தான் அரசியல் வட்டாரத்தில் இன்றைய பேசு பொருளாக உள்ளது. இது ஒருபுறம் இருக்க, இந்நிகழ்ச்சியில் பேசிய தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, முதல்வர் ஸ்டாலின் முதல் திருமாவளவன் வரை அனைவரையும் கடுமையாக விமர்சனம் செய்தார். முதல்வர் புறா கறி என்றதும் ஓடி விடுகிறார், காவல் நிலையம் சென்று கோப்புகளை பார்க்கிறார்; அதில் அவருக்கு என்ன தெரியும்? என கேள்வி எழுப்பினார். மேலும், ‘அறிவாலய ஊதுகுழல் திருமா, இந்தியாவும் இலங்கை போன்று மாறிவிடும் என சொல்கிறார். அண்ணே இலங்கையில் நடந்தது குடும்ப ஆட்சி’ என துவங்கி, ராஜபக்சே குடும்பம் குறித்து பட்டியல் போட்டார். பிறகு ‘அதை அப்படியே தமிழகத்தில் பொருத்தி பாருங்கள்’ என குறிப்பிட்டார். அடுத்து, ‘திருமாவளவன் அண்ணே புத்தகம் படிப்பாரா என தெரியவில்லை. ஏன் என்றால் விவாதத்திற்கு கூப்பிட்டால் ஓடி போய்விடுகிறார். பா.ஜ.க சார்பில் திருமாவளவனுக்கு இலவச கண் சிகிச்சை செய்து தர தயார்’ என பேசினார். இது சிறுத்தை குட்டிகளை வேதனைப்படுத்தி புலம்பவைத்துள்ளது என்பது அவர்களின் சமூக ஊடகப்பதிவுகளில் தெரிய வருகிறது.