தமிழக எல்லைகளை விழுங்கும் கேரளா

கேரள மாநிலத்தின் எல்லைகளை அளக்க, கடந்த 1ம் தேதி முதல் டிஜிட்டல் முறையிலான மறு சர்வே பணியை அம்மாநில அரசு தொடங்கியுள்ளது. மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்ட போதே இருமாநில எல்லைகள் சரியாக பிரிக்கப்படவில்லை. இந்நிலையில் கேரள அரசின் இத்தகைய தன்னிச்சையான நடவடிக்கையால் தமிழக எல்லையில் உள்ள ஏராளமான நிலங்கள் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளள்ளது. தமிழக அரசு இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், தி.மு.க அரசு இதில் தொடர்ந்து மௌனம் காக்கிறது. கேரள அரசின் இந்த அராஜக நடவடிக்கைக்கு அப்பகுதி விவசாயிகளும், சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மூணாறில் இருந்து மாட்டுப்பட்டி செல்லும் வழியில் உள்ள இக்கா நகரில் உள்ள 60 தமிழர்களின் குடியிருப்புகளுக்கு வீட்டை காலி செய்ய வேண்டும் என்று தேவிகுளம் வருவாய் துறையினர் நோட்டீஸ் வழங்கியுள்ளனர். வீடுகளை அகற்றும் பணிக்காக காவலர்கள் பாதுகாப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது குறித்து பேசிய பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம், “மூணாறில் ஆக்கிரமிக்கப்பட்ட கட்டடங்கள் ஏராளமாக உள்ளன. இதில் தமிழர்கள் வாழும் ஒரு குடியிருப்பு பகுதியை மட்டும் குறிவைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த குடியிருப்புவாசிகள் 25 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு குடியிருந்து வருகின்றனர். மூணாறு பஞ்சாயத்துக்கு முறையாக வரி செலுத்துகின்றனர். மின் இணைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எந்த அடிப்படையில் பத்து நாட்கள் அவகாசத்தில், வீடுகளை கேரள வருவாய்த்துறையால் இடிக்க முடியும்? மூணாறில் உள்ள மலையாளிகளின் ஆக்கிரமிப்பு கட்டடங்களுக்கு நோட்டீஸ் வழங்காமல் தமிழர்களின் குடியிருப்புகளை மட்டும் அகற்ற நினைப்பது சட்டவிரோதம். கேரள அரசு தன்னுடைய உத்தரவை திரும்ப பெற வேண்டும். தேவையின்றி மக்கள் மீது திட்டமிட்டு கை வைக்க நினைப்பதற்கு பெயர் அரசு நடவடிக்கை அல்ல, இனவெறி என்பதை கேரள அரசு உணர்ந்து கொள்ள வேண்டும். தேவிகுளம் பீர்மேடு உடுமஞ்சோலை ஆகிய மூன்று தாலுகாக்களில் வாழும் ஆறரை லட்சம் தமிழர்களுக்கும் விடப்பட்ட முதல் சவால் இந்த இக்கா நகர் மீதான நடவடிக்கை” என கூறினார்.