கார்த்தி சிதம்பரத்தின் சொத்துகள் முடக்கம்

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் 11 கோடி ரூபாய் மதிப்பிலான 4 அசையா சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கை விசாரித்து வரும் அமலாக்கத் துறையினர் இது தொடர்பாக எம்.பி.யான கார்த்தி சிதம்பரம் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்குத் தொடர்பாக கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உள்ள கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான ஒரு சொத்து உள்பட 11 கோடி ரூபாய் மதிப்பிலான 4 சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக அமலாக்கத் துறையினர் வெளியிட்ட அறிக்கையில், ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு மூலமாக சட்டவிரோதமாக சேர்த்த சொத்துகள் முடக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.