இதுதானா டெல்லி மாடல்?

டெல்லியில் நடைபெற உள்ள மாநகராட்சித் தேர்தலை முன்னிட்டு, வடக்கு டெல்லியின் மல்கா கஞ்ச் பகுதியில் சந்திரவால் சாலையில் ஆம் ஆத்மி கட்சியின் பேரணி ஒன்று அம்மாநில முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் தலைமையில்நடந்தது. அப்போது ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர் அகிலேஷ் பதி திரிபாதி, சட்டமன்ற உறுப்பினர் சோம்நாத் பார்தியின் செயலாளர் மற்றும் குட்டி தேவி ஆகிய மூவரின் அலைபேசிகள் திருடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவர்கள் புகார் அளித்துள்ளனர். வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என துணை போலீஸ் கமிஷனர் சாகர் சிங் கல்சி தெரிவித்துள்ளார். ஒரு வாரத்திற்கு முன்பு, குஜராத்தில் டைம்ஸ் நவ் தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியரான பத்மஜா ஜோஷி தொலைந்துபோன 1.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அலைபேசியை அவரிடம் பத்திரமாக திருப்பி ஒப்படைந்த பிரதீப் படேல் என்பவர், “இதே அரவிந்த் கெஜ்ரிவாலின் டெல்லி மாடலில் போனை தொலைத்திருந்தால் திருப்பிக் கிடைத்திருக்காது. ஏனெனில், அது டெல்லி மாடல். ஆனால், இது மோடியின் குஜராத் மாடல். ஆகவேதான், உங்களது போன் திருப்பிக் கிடைத்திருக்கிறது” என்று கூறியது நாடெங்கும் வைரலான நிலையில், அவரது வார்த்தைகளை உண்மை என நிரூபிக்கும் விதமாக, ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்ற உறுப்பினரிடமே அலைபேசி திருடப்பட்டிருப்பது அக்கட்சியினரை சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.