இது திட்டமிட்ட சதியா?

பஞ்சாப் மாநிலம் பதிண்டா விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஹுசைனிவாலாவில் உள்ள தேசிய தியாகிகள் நினைவிடத்திற்கு செல்ல பிரதமர் மோடி திட்டமிட்டிருந்தார். ஹெலிகாப்டர் செல்வதற்கு ஏற்ற வானிலை இல்லாததால் சாலை வழியாக செல்ல முடிவு செய்யப்பட்டது. பாதுகாப்பு ஏற்பாடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன என்ற பஞ்சாப் மாநில டி.ஜி.பியின் உறுதிமொழியை அடுத்தே பிரதமரின் சாலைப்பயணம் துவங்கியது. பிரதமரின் வாகன அணிவகுப்பு ஹுசைனிவாலாவுக்கு அருகே ஒரு மேம்பாலத்தை கடந்தபோது, போராட்டம் என்ற பெயரில் சில சமூக விரோதிகள் சாலையை மறித்தனர்.

இதனால் மேம்பாலத்திலேயே 20 நிமிடங்கள் வரை பிரதமர் காத்திருந்தார். பின்னர் மீண்டும் விமான நிலையம் திரும்பி டெல்லி சென்றார். அப்போது, “நான் உயிருடன் பதிண்டா விமான நிலையம் வரை திரும்பியுள்ளேன். அதற்காக உங்கள் முதல்வருக்கு நன்றிகளை தெரிவித்து விடுங்கள்” என்று பிரதமர் மோடி பஞ்சாப் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். பிரதமரின் பயணத் திட்டத்தை பஞ்சாப் மாநில அரசுக்கு முன்கூட்டியே தெரிவித்தும், பஞ்சாப் காவல் துறை வேண்டுமென்றே பாதுகாப்பு ஏற்பாடுகளை புறக்கணித்துள்ளது.

இதன் பின்னணியில் காங்கிரசின் பெரிய சதித்திட்டம் உள்ளது என்பதை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் உள்ளன. ‘பஞ்சாப் முதல்வர் சன்னி, பிரதமர் எங்கிருக்கிறார் என எனக்கு சரியாகத் தெரியவில்லை என கூறி இருக்கிறார். ஆனால் கலவரக்காரர்கள் அவர் வரும் வழியை அறிந்திருந்து காலை 11 மணி முதலே அங்கு முகாமிட்டு இருந்தனர். அந்த இடத்திலிருந்து 20 கி.மீ தொலைவில்தான் பாகிஸ்தான் எல்லை உள்ளது. பிரதமர் இந்த வழியாகத்தான் போவார் என்பது எங்களுக்கு ஏற்கனவே தெரியும்’ என்ற போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். இது, காவல்துறை, அரசு நிர்வாகத்தைத் தவிர வேறு யாருக்கும் தெரியக்கூடாத தகவல் திட்டமிட்டே கசியவிடப்பட்டுள்ளதை நிரூபிக்கிறது.

உள்நாட்டு, வெளிநாட்டு பயங்கரவாதிகளால் பிரதமரின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதை உளவு அமைப்புகள் எச்சரித்து வரும் வேளையில், பிரதமர் பயணிக்கும் பாதையில் போராட்டக்காரர்களுடன் காவல்துறை அதிகாரிகள் சந்தோஷமாகப் பேசி ஒன்றாக தேநீர் அருந்தி உள்ளனர். கலவரக்காரர்களை அகற்ற எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. உங்களை வெளியேற்ற யாராவது வெளியேற்ற முயன்றார்களா? என்று கேட்டதற்கு, ‘காவல்துறையினர் அப்படி செய்ய முயற்சித்தால் என்ன நடக்கும் என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும். நாங்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தோம். இப்பக்கமாக செல்ல முயன்ற பாஜ.கவினரையும் நாங்கள் அனுமதிக்கவில்லை என கலவரக்காரர்கள் கூறினர். 40க்கும் மேற்பட்ட பா.ஜ.கவினர் சென்ற பேருந்துகள் தாக்கப்பட்டன. பல பா.ஜ.கவினர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.

பிரதமரின் கான்வாய் அந்த இடத்தை அடைவதற்கு அரை மணி நேரம் முன்பாக பஞ்சாப் மாநிலத் துணை முதல்வர் ஓ.பி. சோனி அதே இடத்தை பாதுகாப்பாக கடந்துச் சென்றார். எதிர்ப்பாளர்கள் அவரை வழிமறிக்கவில்லை. மேலும், பஞ்சாப் முதல்வரின் சன்னியின் முன்னுக்குப் பின்னான முரண்பாடான பேச்சுகள், உள்துறை அமைச்சகத்தின் அவசரகால தொலைபேசி அழைப்புகளை ஏற்க மறுத்தது போன்ற விஷயங்கள் இது ஒரு தெளிவாக திட்டமிடப்பட்ட பாதுகாப்பு குறைபாடு என்ற சந்தேகத்தை நிரூபிக்க போதுமானது.

பஞ்சாப் பெரோஸ்பூரில் மோடியின் பொதுக்கூட்டத்திற்கு வந்த மக்கள் மழையில் நனையாமல் இருக்க குடைகளையும், சேர்களையும் தலைக்குமேல் பிடித்தபடி மோடியை

வரவேற்க காத்திருந்தனர். இந்த புகைப்படம், ‘கூட்டம் இல்லாததால் மோடி திரும்பிச் சென்றார்’ என்ற காங்கிரசின் பொய்யை வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது.