அரசியல் சட்டத்தை விட உயர்ந்தவரா ராகுல்?

மத்திய அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது நீதிமன்றம் தான். அதன்படி எடுக்கப்பட வேண்டிய சட்டபூர்வ நடவடிக்கையாகவே, அவரது எம்.பி. பதவியை மக்களவை பறித்துள்ளது. இந்த நீதித்துறை சார்ந்த, சட்டரீதியான நடவடிக்கைகளை எதிர்த்து காங்கிரஸ் தலைவர்கள் கூச்சல் போடுகிறார்கள். அவர்கள் சோனியாகாந்தி குடும்பத்தை நீதித்துறையை விட மிக உயர்ந்ததாக கருதுகிறார்கள். சோனியாகாந்தி குடும்பமும், தன்னை உயர்தர வர்க்கம் என்றும், அரசியல் சட்டத்தை விட உயர்ந்தது என்றும் கருதுகிறது. சூரத் நீதிமன்றம், ராகுல்காந்திக்கு அனைத்து வாய்ப்புகளையும் அளித்துள்ளது. மன்னிப்பு கேட்கக்கூட வாய்ப்பு அளித்தது. ஆனால், தனது குடும்பத்துக்கு எதிராக தீர்ப்பு அளிக்க நீதிமன்றத்துக்கு துணிச்சல் இருக்காது என்று கருதி, அவர் மன்னிப்பு கேட்க மறுத்து விட்டார். ஆனால், சட்டம் தனது கடமையை செய்துள்ளது. இதில் மத்திய அரசுக்கோ, பா.ஜ.கவுக்கோ எந்தத் தொடர்பும் இல்லை. ஒரு எம்.பி.யின் பதவி பறிப்பு பிரச்சனையில், மக்களவைக்கு விருப்ப உரிமை அதிகாரம் எதுவும் கிடையாது. ஜனநாயகம், அச்சுறுத்தலில் இருப்பதாக தற்போது கூறுபவர்கள்தான், நீதித்துறை நடவடிக்கைக்கு எதிராக தெருமுனை போராட்டம் நடத்தி நாட்டின் ஜனநாயகத்தை இழிவுபடுத்தி வருகிறார்கள். நாட்டை இழிவுபடுத்துவதற்கான எந்த வாய்ப்பையும் ராகுல்காந்தி விட்டுவிடுவது இல்லை. அவர் தொடர்ந்து ஜனநாயகத்தின் தூண்களுக்கு சவால் விடுத்து வருகிறார். நீதிமன்றம் மன்னிப்பு கேட்க வாய்ப்பு அளித்தும் ஆணவமாக நடந்து கொண்டார். ஜனநாயக நடைமுறையை விட தன்னை உயர்ந்தவராகக் கருதுவதால், உண்மையில் அவர்தான் ஜனநாயகத்துக்கு பெரிய அச்சுறுத்தல். மிகச்சிறந்த தேசபக்தரும், சுதந்திர போராட்ட வீரருமான வீர சாவர்க்கரை ராகுல்காந்தி இழிவுபடுத்தி வருகிறார். தான் சாவர்க்கர் அல்ல என்று ராகுல்காந்தி சரியாகத்தான் சொல்லி இருக்கிறார். சாவர்க்கரை பற்றி அவர் உண்மையிலேயே தெரிந்து கொள்ள விரும்பினால், அந்தமான் சிறக்குச் சென்று, சாவர்க்கர் யார்? அவர் செய்த அளப்பரிய தியாகங்கள் என்ன? என்று தெரிந்து கொள்ளட்டும்” என்று கூறினார்.