ஒருங்கிணைந்த முப்படை முயற்சி

இந்திய விமானப்படை தலைமைத் தளபதி வி.ஆர் சௌதரி, “ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய மூன்று பிரிவுகளும் தனித்தனியாக வெவ்வேறு தலைமையின் கீழ் இயங்கி வருகின்றன. பிராந்திய ரீதியிலும் போர் ஆயத்த ரீதியிலும் முப்படைகளுக்கிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதலில் விமானப் படை வீரர்களையும் கடற்படை வீரர்களையும் ஒரு தலைமையின் கீழ் ஒருங்கிணைக்க ஆலோசனை நடைபெற்று வருகிறது. தொடர்ந்து முப்படைகளையும் ஒருங்கிணைக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக முப்படைகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. முப்படைகளும் ஒருங்கிணைந்து செயல்படுவதால், நமது படைகளின் போர்த்திறன் அதிகரிக்கும். ஒரு தலைமையின் கீழ் குறிப்பிட்ட பகுதியில் பாதுகாப்பு சவால்களை அவை கவனித்துக் கொள்ளும். இந்த ஒருங்கிணைப்பு திட்டத்தில் விமானப்படை உறுதியுடன் உள்ளது. நாட்டின் இறையாண்மையை பாதுகாக்கும் வகையில் படைகளைத் தயார் நிலையில் கூடுதல் வலிமையுடன் வைத்திருக்க வேண்டும் என்பதே எனது தொலைநோக்குப் பார்வை. இந்த ஒருங்கிணைப்பு திட்டம் குறித்து ஆராயுமாறு முன்னாள் தலைமைத் தளபதி பிபின் ராவத் உத்தரவிட்டிருந்தார். கடந்த டிசம்பரில் அவருடைய மறைவுக்குப் பிறகு, இந்த ஆலோசனைகளில் சிறிது தொய்வு ஏற்பட்டது. தற்போது மீண்டும் அந்த திட்டம் குறித்து முழு வேகத்தில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது” என தெரிவித்துள்ளார்.