ஐ.நாவில் பாரத பெண் பிரதிநிதி

ஐ.நாவுக்கான பாரதத்தின் நிரந்தர பிரதிநிதியாக இருந்த டி.எஸ்.திருமூர்த்தியின் பதவிக்காலம் முடிந்த நிலையில், 1987ம் ஆண்டு பேட்ச் ஐ.எப்.எஸ் அதிகாரியான ருச்சிரா கம்போஜ் என்ற பெண் அதிகாரி இந்தப் பதவிக்கு தேர்வாகியுள்ளார். ஐ.நாவுக்கான பாரதத்தின் நிரந்தர பிரதிநிதியாக பெண் அதிகாரி ஒருவர் பொறுப்பேற்பது இதுவே முதல்முறை. இவர் கடைசியாக பூடானுக்கான பாரதத் தூதராக இருந்தார். ஜூன் மாதம் அவர் ஐ.நாவுக்கான நிரந்தர பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், கருத்து தெரிவித்த ருச்சிரா கம்போஜ், “இன்று நான் ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குத்ரேஸை சந்தித்து ஐ.நா.வுக்கான பாரதத்தின் நிரந்தர உறுப்பினராக சேர்வதற்கான ஆவணங்களை சமர்ப்பித்தேன். பாரதத்தில் இருந்து இந்தப் பதவியை அலங்கரிக்கும் முதல் பெண் என்ற கௌரவத்தைப் பெற்றுள்ளேன். பெண்களே… நம்மால் நினைத்தால் முடியும்” என்று தெரிவித்துள்ளார்.