பாரதத்தின் மத சுதந்திரம் இணையற்றது

ஆந்திர சமஸ்தா தலைவர் பொன்மலா அப்துல் காதர் முஸ்லியார், ஜனவரி 28 அன்று கோழிக்கோட்டில் நடைபெற்ற சன்னி மாணவர் கூட்டமைப்பின் 50வது மாநில பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்துகொண்டு பேசுகையில், “நம் நாட்டில் உள்ள மத சுதந்திரம் இணையற்றது. மத சுதந்திரத்தை பாரதம் அனுமதிக்கிறது. மற்ற எந்த நாட்டையும் விட இங்கு இஸ்லாமிய அமைப்புகள் அதிக அளவில் செயல்படுகின்றன. சௌதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளை விட நம் நாட்டில் மத சுதந்திரம் மிகவும் சிறந்தது. இங்கே, எங்களது அமைப்பு மத்திய முஷாவிரா முதல் மண்டல முஷாவீர வரை செயல்படுகிறது. அடிமட்ட மதச் சுதந்திரம் பாரதத்தைப் போல வேறு எந்த நாட்டிலும் இல்லை. சௌதி அரேபியாவில் கூட சாத்தியமில்லாத வகையில் பாரதத்தில் வெள்ளிக்கிழமை உரைகளுக்கு ஒலிவாங்கிகளைப் பயன்படுத்த முஸ்லிம்களுக்கு சுதந்திரம் உள்ளது” என கூறினார். காந்தபுரம் ஏ.பி.அபுபக்கர் முஸ்லியார் மாநாட்டை துவக்கி வைத்து பேசுகையில் பயங்கரவாதம் எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வாகாது. சன்னி தத்துவம் பயங்கரவாதத்திற்கு எதிரானது” என்றார். மாநாட்டில், அரசை எதிர்த்து நாம் நாட்டை அவமதிக்கக் கூடாது என்ற தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. கேரளா நத்வத்துல் முஜாஹிதீன் (கே.என்.எம்) மாநில செயலாளர் அப்துல் மஜீத் சுவாலாஹி பேசுகையில், “பாரதத்தில் தான் முஸ்லிம்கள் அதிகபட்ச பாதுகாப்பும் அமைதியும் பெறுகிறார்கள்” என்றார். முன்னதாக, ஜனம் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், பயங்கரவாதத்தின் அபாயம் குறித்து இளைஞர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என கூறியிருந்தார். சமஸ்தா என அழைக்கப்படும் சமஸ்தா கேரளா ஜெம் இய்யத்துல் உலமா (அனைத்து கேரள உலமா அமைப்பு), கேரள முஸ்லிம்கள் மத்தியில் மிக உயர்ந்த ஆதரவை அனுபவிக்கும் புகழ்பெற்ற சுன்னி அறிஞர்களின் சங்கமாகும். இது 1926ல் தொடங்கப்பட்டது. நாற்பது உறுப்பினர்களைக் கொண்ட முஷாவாரா சுன்னி சபையின் உயர் தலைமையாகும். சபை ஆயிரக்கணக்கான ஷாபிய மசூதிகள், மதரஸாக்கள் மற்றும் அரபிக் கல்லூரிகள் ஆகியவற்றை நிர்வகித்து வருகிறது. கேரளாவில் வளர்ந்து வரும் சலபி இயக்கத்தின் பிரதிபலிப்பாக 1921 மாப்ளா எழுச்சியின் விளைவாக இந்த சபை ஏற்பாடு செய்யப்பட்டது.