தேசிய வரைபடக் கொள்கையில் மாற்றம்

நாட்டின் சமூக, பொருளாதார வளர்ச்சியில் இயற்கை ஆதாரங்கள், கனிம வளங்கள், உள்கட்டமைப்பு சார்ந்த புள்ளிவிவரத் தகவல்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. டிஜிட்டல் துறையை பாரதம் ஊக்குவித்து வருகிறது. இந்நிலையில், இடம், இயற்கை ஆதாரங்கள் குறித்த தகவல்கள், புள்ளிவிவரங்களை ஒருங்கிணைக்கும் தேசிய வரைபடக் கொள்கையில் தற்போதுள்ள தடைகளை நீக்கி,  பாரத நிறுவனங்களுக்குப் பயன்படும் வகையில் சீர்திருத்தங்களை மத்திய அரசு கொண்டுவரவுள்ளது. இதனால் நிறுவனங்கள் தங்கள் தொழில் வாய்ப்புகளைப் பெருக்கிக்கொள்ளலாம். தொழில் தொடங்குவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை அறிந்து முன்கூட்டியே தவிர்க்கலாம். ‘ஐந்து லட்சம் கோடி டாலர் பொருளாதார நாடாக பாரதத்தை வளர்த்தெடுக்கும் பயணத்தில், வரைபடக் கொள்கை களில் செய்யப் பட்டுள்ள சீர்திருத்தம் முக்கியத் திருப்புமுனையாக இருக்கும். ஸ்டார்ட் அப், தனியார் துறை, பொதுத் துறை, ஆராய்ச்சி நிறுவனங்கள் இதன் மூலம் பெரிய அளவில் பயனடையும். வேலைவாய்ப்பும், பொருளாதார வளர்ச்சியும் பெருகும். விவசாயிகள் இதனால் பெரும் பலனடைவார்கள்’ என்று பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.