காஷ்மீரில் அதிகரிக்கும் வெகுஜன வன்முறை

முஸ்லிம் பயங்கரவாத அமைப்புகளில் ஒன்றான லஷ்கர் இ இஸ்லாம், சில நாட்களுக்கு முன் வெளியிட்ட ‘காஃபிர்களுக்கு கடிதம்’ என்ற தலைப்பில், “காஷ்மீர் பள்ளத்தாக்கை விட்டு வெளியேறுங்கள் அல்லது மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்” என்று எழுதப்பட்டிருந்தது. காஷ்மீரி ஹிந்துக்கள் தங்கள் கட்டளைக்கு கீழ்ப்படியாததற்காக கொல்லப்பட்டு நரகத்திற்கு அனுப்பப்படுவார்கள், அவர்களுக்கு உதவும் முஸ்லிம்களும் கொல்லப்படுவார்கள், அவர்களை பிரதமர் மோடி அல்லது அமித் ஷா உட்பட யாராலும் காப்பாற்ற முடியாது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில், காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் உள்ள காகபோரா ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள ஒரு தாபாவில் ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்களான ஹெட் கான்ஸ்டபிள் சுரீந்தர் சிங் மற்றும் ஏ.எஸ்.ஐ தேவராஜ் இருவர் தேநீர் அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இருவரும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். அதில், ஒருவர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவருகிறார்.  மற்றொருவர் உயிரிழந்தார்.  கடந்த மூன்று வாரங்களாக காஷ்மீர் பள்ளத்தாக்கில் பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்கள் மீது பயங்கரவாதிகள் அதிகப்படியான தாக்குதல்களை முடுக்கிவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காகபோராவில் நடத்தப்பட்ட தாக்குதல் இந்த மாதத்தில் நடந்த ஒன்பதாவது தாக்குதலாகும்.