பாரதத்தின் முக்கியத்துவம்

உலக அளவில் நமது நாட்டின் முக்கியத்துவம், அதனை சீர்பட நடத்தும் மோடி தலைமையிலான மத்திய அரசு, அதன் செயல் திறன் குறித்து இங்குள்ள பலருக்குத் தெரிவதில்லை. ஆனால், உலக நாடுகள் அதனை மிகத் தெளிவாக புரிந்துகொண்டுள்ளன. உக்ரைன் ரஷ்ய போரில் அந்த நாடுகள் பெறாத முக்கியத்துவத்தை நடுநிலை வகிக்கும் பாரதம் பெற்றுள்ளது. இதற்கு உதாரணமாக, உக்ரைன் அதிபர், ரஷ்ய அதிபருடன் பேசி நமது மக்களை பத்திரமாக மீட்டுவந்த பிரதமர் மோடியின் செல்வாக்கு, மோடி பேசினால் போரை ரஷ்யா நிறுத்தும் என உக்ரைன் தூதர் கூறியது என்பதை சொல்லலாம். இதுமட்டுமல்ல, போர் துவங்கி தற்போதுவரையிலான கடந்த 35 நாட்களில் பாரதம் வந்துள்ள, வரப்போகும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள், இணைய வழியில் உரையாடிய தலைவர்கள் பட்டியலே இதற்கு சாட்சி. அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலர் விக்டோரியா நூலண்ட், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி, ஜப்பான் பிரதமர், இந்தோ பசிபிக் பகுதிக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் சிறப்பு தூதர் கேப்ரியல் விசென்டின், ஜெர்மனியின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், ஆஸ்திரியா வெளியுறவுத்துறை அமைச்சர், கிரீஸ் வெளியுறவுத்துறை அமைச்சர், இலங்கை அமைச்சர் என பலர் நேரடியாக வருகை தந்தனர். ஆஸ்திரேலிய பிரதமர் இணையவழியில் இருதரப்பு உச்சி மாநாட்டை நடத்தினார். குவாட் அமைப்பின் தலைவர்கள் இணைய வழியில் மாநாடு நடத்தினர். பல உலகத் தலைவர்கள் தொலைபேசியில் சர்வதேச நிகழ்வுகள் குறித்து பிரதமரிடம் பேசியுள்ளனர். மேலும் பல உலக நாட்டுத் தலைவர்களும் பாரதத்துடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்த வருகை தர உள்ளனர். உதாரணமாக, ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர், இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலாளர், அமெரிக்க பிரதிநிதிகள், இஸ்ரேல் நிதியமைச்சர், இஸ்ரேல் பிரதமர், நேபால பிரதமர் என நீள்கிறது பட்டியல்.