மனித சங்கிலியை அனுமதிக்கக்கூடாது

பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச்.ராஜா, “நாடு முழுவதும் பி.எப்.ஐ மற்றும் அதனுடன் தொடர்புடைய இயக்கங்களும் தடை செய்யப்பட்டுள்ளன. இந்த இயக்கத்துக்கு ஆதரவாக பேசுவதும், செயல்படுவதும் சட்டப்படி குற்றமாகும். தமிழகத்தில் அக்டோபர் 11ல் திருமாவளவன், சீமானும் நடத்தவுள்ள மனித சங்கிலிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கக் கூடாது. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு அளித்ததால் 1991ல் தி.மு.க ஆட்சி கலைக்கப்பட்டதை ஸ்டாலினுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். மனித சங்கிலிக்கு அனுமதி வழங்கினால் 1991ல் நடந்தது இப்போதும் நடைபெறும். இதை நடத்தினால் திருமாவளவனும், சீமானும் கைது செய்யப்பட வேண்டும். புதுச்சேரியில் அக்டோபர் 2ல் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலம் அமைதியாக நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் ஊர்வலத்துக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தும் காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். தமிழக டி.ஜி.பி, பி.எப்.ஐக்கு ஆதரவாகவும், திருமாவளவனுக்கு சாதகமாகவும் பேசியது துரதிர்ஷடவசமானது. காவல் துறைக்கு தலைவராக இருக்க டி.ஜி.பி சைலேந்திரபாபுவுக்கு தகுதி இல்லை. ராஜராஜ சோழன் நூறு சதவீதம் ஹிந்து பேராரசர். பாரதத்தில் பிறந்த அனைத்து மதங்களும் ஹிந்து மதங்கள் தான். சிவம், சைவம், வைணவம் என்பது வேறு வேறல்ல. அனைத்தும் ஹிந்து மதம்தான். அரசியலமைப்பு சட்டப்படியும், ஆதிசங்கரர் உருவாக்கிய வழிபாட்டு முறைப்படியும் ராஜராஜ சோழன் ஹிந்து அரசர் தான். தமிழகத்தில் நல்ல மாற்றம் வந்து கொண்டிருக்கிறது. அதனால்தான் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்துக்கு தடை விதிக்கிறார்கள். தமிழகத்தில் நடைபெறும் தேச விரோத, தமிழ் விரோத ஆட்சிக்கு முடிவு கட்டப்படும். அதுவரை எங்களது போராட்டம் தொடரும்” என்று கூறினார்.