ஹிஜாப் தடை வழக்கு

கர்நாடகாவில் கடந்த பிப்ரவரி மாதத்தில் பள்ளி, கல்லூரிகளில் முஸ்லிம் மாணவிகள் மற்றவர்களை போல சீருடை மட்டுமே அணிய வேண்டும் என கூறி, ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. இதற்கு எதிராக முஸ்லிம் மாணவிகள் தொடுத்த வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், ‘ஹிஜாப் இஸ்லாமிய சட்டத்தில் அத்தியாவசியமான வழக்கம் அல்ல. எனவே கல்வி நிலைய‌ங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும்’ என‌ தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து முஸ்லிம் மாணவிகள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அதை அவசர வழக்காக விசாரிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்நிலையில் வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் தலைமை நீதிபதி என்.வி. ரமணா, தலைமைய்லான அமர்வில் ஆஜராகி, “இந்த மனு கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக விசாரிக்கப்படாமல் நிலுவையில் உள்ளது. மனுவை உடனடியாக விசாரிக்க வேண்டும். இல்லையென்றால் ஹிஜாப் தடையை ரத்து செய்துவிட்டு நிதானமாக‌ விசாரிக்கலாம்” என்றார். அதற்கு பதில் அளித்த தலைமை நீதிபதி, “இவ்வழக்கை விசாரிக்க தனி அமர்வு அமைக்கப்படும். அதில் ஒரு நீதிபதிக்கு உடல்நிலை சரி இல்லை. அந்த அமர்வு ஹிஜாப் விவகாரத்தில் அடுத்தக்கட்ட முடிவை எடுக்கும். அதுவரை ஹிஜாப் தடையை ரத்து செய்ய முடியாது” எனக்கூறி வழக்கை ஒத்திவைத்தார்.