இயற்கை விவசாயம் ஒரு இயக்கமாக மாறும் தென்காசியில் கவர்னர் ஆர்.என்.ரவி நம்பிக்கை

”இயற்கை விவசாயம் ஒரு இயக்கமாக மாறும்,” என தென்காசியில் கவர்னர் ரவி பேசினார். தமிழக கவர்னர் ரவி, இரண்டு நாள் பயணமாக தென்காசி மாவட்டம் வந்துள்ளார். நேற்று காலை தூத்துக்குடிக்கு விமானத்தில் வந்தவர், அங்கிருந்து கார் மூலம் தென்காசி வந்தார். நேற்று பகலில் குற்றாலம் தனியார் ரிசார்ட்டில் விவசாயிகள் மற்றும் விவசாய தொழில் முனைவோர்களுடன் கலந்துரையாடல் நடத்தினார். இயற்கை விவசாயிகளின் உற்பத்தி பொருட்களின் கண்காட்சியை பார்வையிட்டார்.

அங்கு அவர் பேசியது: எல்லா தொழில்களில்களையும் விட மேம்பட்டது விவசாயம் தான். நுாற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் பூச்சிக்கொல்லிகள், உரங்கள் பயன்படுத்தாமல் பாரம்பரிய விவசாயத்தை மேற்கொண்டு அதிக மகசூல் பெற்றனர். அவற்றை நாம் மறந்து விட்டோம். மரபு சார்ந்த இயற்கை விவசாயத்தை நவீன தொழில்நுட்பங்களுடன் இணைந்து மேற்கொண்டால் சிறந்த மகசூல் கிடைக்கும். இயற்கை விவசாயிகளின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறது. இனி வரும் காலத்தில் இயற்கை விவசாயம் ஒரு இயக்கமாக மாறும். நான் இங்கு இருப்பதை என் சொந்த ஊரில் இருப்பதை போல உணர்கிறேன். இவ்வாறு பேசினார். தொடர்ந்து, ஆழ்வார்குறிச்சியில் பாரம்பரிய மண்பாண்டங்கள் தயாரிப்பாளர்களை சந்தித்து அவர்களின் செய்நேர்த்தி திறமையை பாராட்டினார். இரவு கோவிந்தபேரியில் உள்ள ‘ஜோேஹா’ கிராமத்திற்கு சென்றார். இரவு அங்கு தங்கினார்.