கோயில் நிதியில் கை வைக்கும் அரசு

ஆலய வழிபடுவோர் சங்கத் தலைவர் டி.ஆர்.ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ‘பழநி தண்டாயுதபாணி கோயில் நிதியில் இருந்து ரூ. 15.20 கோடி, திருநெல்வேலி காந்திமதி நெல்லையப்பர் கோவில் நிதியில் இருந்து ரூ. 13.50 கோடி, சென்னை, வில்லிவாக்கம் பாலியம்மன், இளங்காளியம்மன் கோயில்கள் நிதியில் இருந்து ரூ. 16.30 கோடிகளை பயன்படுத்தி, முதியோர் இல்லங்கள் அமைக்க தமிழக அரசு ஒப்புதல் வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த கோயில்களில் அறங்காவலர்கள் குழு நியமிக்கப்படவில்லை. பல ஆண்டுகளாக, தக்கார், நிர்வாக அதிகாரிகள்தான் பதவியில் உள்ளனர். கோயில்கள், அதன் சொத்துக்கள் தொடர்பாக, பெரிய அளவிலான முடிவுகளை எடுக்க அறங்காவலர் தான் முடிவெடுக்க முடியும் என விதிமுறை உள்ளது. மேலும், அரசின் அறிவிப்பில் ரூ. 5 கோடிக்கான திட்டம் என கூறப்பட்டது. ஆனால், அரசின் உத்தரவில் ரூ. 45 கோடிக்கு மேல் வருகிறது. அந்த உத்தரவை, ரத்து செய்ய வேண்டும்’ என கோரியுள்ளார். இதற்கு பதில் அளிக்க அவகாசம் வேண்டும், அதுவரை கோயில்கள் நிதியை பயன்படுத்த மாட்டோம் எனவும், அட்வகேட் ஜெனரல் தெரிவித்தார். இதையடுத்து விசாரணையை, ஆறு வாரங்களுக்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.