கட்சியில் இருந்து காயத்ரி ரகுராம் நீக்கம்

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக பா.ஜ.கவின் வெளிநாட்டு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநிலத் தலைவர் காயத்ரி ரகுராம் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதால் கட்சியில் அவர் வகித்து வரும் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ஆறு மாத காலத்திற்கு நீக்கப்படுகிறார். ஆகவே, கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் காயத்ரி ரகுராமிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார். முன்னதாக, ‘கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர்களைத் தவிர்த்து மற்றவர்கள் யூடியூப் சேனல்களுக்கு நேர்காணல் வழங்க விருப்பப்பட்டால், அதை கட்சியின் ஊடகப்பிரிவுத் தலைவரிடம் தெரியப்படுத்த வேண்டும். இனி வரும் காலங்களில் கட்சியின் ஒப்புதல் பெற்றே யூடியூப் சேனல்களுக்கு நேர்காணல் அளிக்க வேண்டும். கட்சி கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று அண்ணாமலை உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து காயத்ரி ரகுராம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “நன்றி அண்ணாமலை ஜி. 6 மாதங்களுக்கு கட்சியிலிருந்து என்னை நீக்கியுள்ளதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் என்னை நேசிப்பவர்கள் என்னிடம் பேசுவார்கள். அதை யாராலும் தடுக்க முடியாது. இடைநீக்கம் செய்தாலும் தேசத்திற்காக உழைப்பேன்” என்று பதிவிட்டுள்ளார்.