இலவச திட்டங்கள் ஒரு பேராபத்து

இலவச திட்டங்களை அறிவிக்கும் அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிடர் ஜெனரல் துஷர் மேத்தா, தேர்தலுக்கு முன்பு இலவசங்களை அரசியல் கட்சிகள் அறிவிப்பதை தடைசெய்ய மத்திய அரசு ஆதரவளிக்கும். இலவசங்கள் விரைவில் நிறுத்தப்படவில்லை என்றால் பாரதப் பொருளாதார பேரழிவை சந்திக்கும் என்றார். இதையடுத்து தலைமை நீதிபதி, ‘இது மிகவும் முக்கியமான விவகாரம். ஒட்டுமொத்த மக்கள் மற்றும் தேசத்தின் பொருளாதாரத்தில் இது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால், இலவசங்களை நிறுத்த எந்த அரசியல் கட்சிகளும் நினைக்கவில்லை. இந்த விவகாரத்தில் ரிசர்வ் வங்கி, மத்திய நிதி ஆணையம், நிதி ஆயோக், ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் உறுப்பினர்கள் அடங்கிய குழு அமைக்கப்படவேண்டும். அந்த குழு, தேர்தலில் அரசியல் கட்சிகள் இலவசங்கள் குறித்த வாக்குறுதிகள், அவற்றை ஒழுங்குமுறைப் படுத்துவற்கான யோசனைகளை மத்திய அரசு, தேர்தல் ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்’ என்றார் மேலும், இந்த விவகாரத்தில் குழு அமைப்பது அதன் செயல்பாடுகள் குறித்து மத்திய அரசு, தேர்தல் ஆணையம், மாநிலங்களவை எம்.பி. கபில் சிபில் மற்றும் மனுதாரர் தங்கள் யோசனைகளை அடுத்த 7 நாட்களுக்குள் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார்.