ஆட்டோ மூலம் இலவச ஆக்சிஜன்

சென்னையைச் சேர்ந்த 36 வயது சீதா தேவி தனக்குச் சொந்தமான ஆட்டோவில் ஆக்சிஜன் சிலிண்டரை பொருத்தி, அதன் மூலம் பல கொரோனா நோயாளிகளுக்கு இலவசமாக ஆக்சிஜன் வழங்கி அவர்களது உயிரைக் காப்பாற்றி வருகிறார். கடந்த மே மாதம் கொரோனா இரண்டாம் அலை தாக்கத்தின்போது சீதா தேவியின் 65 வயது தாயார் கொரோனாவால் பாதிக்கப் பட்டார். உடனடியாக அவரை ராஜீவ் காந்தி மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால், அங்கு பல மணி நேரம் அவர்களுக்கு படுக்கை கிடைக்கவில்லை. பின்னர், படுக்கை கிடைத்தும் உரிய நேரத்தில் ஆக்சிஜன் கிடைக்காத காரணத்தால் சீதாவின் தாயார் உயிரிழந்தார்.
இதனால் மனமுடைந்த சீதா, தனது தாயாரைப் போல் வேறு யாரும் ஆக்சிஜன் கிடைக்காமல் உயிரிழக்கக்கூடாது என்று முடிவெடுத்தார். ஏற்கெனவே ஸ்டிரீட் விஷன் சோசியல் சாரிட்டபில் டிரஸ்ட் என்ற தனது அரசுசாரா தொண்டு நிறுவனத்தின் மூலம் தன்
பகுதியில் உள்ள ஆதரவற்ற வர்களுக்கு உணவு விநி யோகம் செய்து வந்தார். அதற்காகப் பயன்படுத்தும் தன் ஆட்டோவின் மூலம் இலவச ஆக்சிஜன் சேவை வழங்க திட்டமிட்டார்.
அதைத் தொடர்ந்து, மே 6ம் தேதி தன் ஆட்டோவில் ஆக்சிஜன் சிலிண்டரை வாங்கி பொருத்தினார். அன்று முதல் ஒவ்வொரு நாளும் சீதா தேவி, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சென்று அங்கு ஆக்சிஜன் கிடைக்காமல் திண்டாடும் ஏழை கொரோனா நோயாளிகளுக்கு இலவசமாக ஆக்சிஜன் வழங்கி வருகிறார். தினமும் 12 மணி நேரம் அவர் இந்தச் சேவையை செய்து வருகிறார். இதைத் தவிர, அவசரமாக ஆக்சிஜன் தேவை என எப்போதுஅழைப்பு வந்தாலும் உடனடியாக அங்கு செல்கிறார். அவருக்கு உதவியாக சிலதன்னார்வலர்களும் அவருடன் பணியாற்றி வருகிறார்கள்.
இதுவரை 500க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சீதா இலவசமாக ஆக்சிஜன் வழங்கியுள்ளார். இந்தத் திட்டம் வெற்றிகரமாக செயல்படுவதால், மேலும் 2 ஆட்டோக்களில் ஆக்சிஜன் சிலிண்டர்களை பொருத்தி ஆக்சிஜன் ஆட்டோவாக மாற்றியுள்ளார். ஆக்சிஜன் சேவையைத் தவிர கைவிடப்பட்ட கொரோனா நோயாளி களின் உடல்களை தன்ஆட்டோ மூலம் இடுகாட்டுக்கு எடுத்துச் செல்கிறார் சீதா.
இவற்றுடன், ஆதவற் றவர்களுக்கு இலவசமாக உணவு வழங்கும் சேவையை யும் அவர் தொடர்ந்து செய்து வருகிறார். மேலும், சென்னையில் உள்ள 10 மருத்துவமனைகளில் இலவச சானிட்டரி நாப்கின்கள் வழங்கும் இயந்திரங்களையும் சீதா நிறுவியுள்ளார். தன் வாழ்க்கையில் மிக துயரமான தருணத்திலும் மன உறுதியை இழக்காமல், பலருக்கும் உதவி செய்துவரும் சீதா தேவி, நம் அனைவருக்கும் முன்னு தாரணமாகத் திகழ்கிறார்.