தமிழ் நாடகத் தந்தை

சென்னை பல்லாவரம் அடுத்த பம்மலில் பிறந்தவர் தமிழ் நாடகத் தந்தை என்று போற்றப்படுபவரும், வழக்கறிஞர், நீதிபதி, நாடக ஆசிரியர், நாடக நடிகர், எழுத்தாளர் என்ற பன்முகத் திறன் வாய்ந்தவருமான பம்மல் விஜயரங்க சம்பந்த முதலியார்.

பம்மல் சம்பந்த முதலியார் ஆங்கில நாடகங்கள் அதிகம் பார்ப்பார். 1891ல் பெல்லாரியில் இருந்து வந்திருந்த ஒரு நாடகக் குழுவில் வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், பட்டதாரிகள் இருப்பதை அறிந்ததும், இவருக்கு நாடகத்தின் மீதான ஈர்ப்பு அதிகமானது. உடனே ‘சுகுண விலாஸ் சபா’ என்ற நாடகக் குழுவை உருவாக்கினார். சென்னைக்கு வந்த பார்சி நாடகக் குழுவினரின் பிரம்மாண்டமான திரை, மேடை அமைப்புகள், சிறப்பான உடை அலங்காரம் இவரிடம் தாக்கத்தை ஏற்படுத்தின. தீவிர முயற்சியால் அதனை தன் நாடகங்களிலும் செயல்படுத்தினார்.

22வது வயதில் ‘லீலாவதி-சுலோசனா’ என்ற அவரது முதல் நாடகம் அரங்கேறியது. ஷேக்ஸ்பியரின் உலகப் புகழ்பெற்ற ஹாம்லெட், ஆஸ் யு லைக் இட், மெக்பெத் உட்பட பல நாடகங்களை அவற்றின் நயம், சுவை குறையாமல் தமிழ் நாடகங்களாக ஆக்கினார். ஆங்கில, வடமொழி நாடகங்களை தமிழ்ச் சூழலுக்கு ஏற்ப மாற்றியமைத்து மேடையேற்றினார்.

தெருக்கூத்து மட்டும்தான் நாடகம் என்ற நிலையை மாற்றி, நகரங்களில் பிரம்மாண்ட மேடை அமைத்து பல விதமான நாடகங்களை வெற்றிகரமாக நடத்தி, மேல்தட்டு மக்கள், கற்றவர்கள், அறிஞர்கள் என அனைவரையும் பார்க்க வைத்தார். சுப முடிவு என்ற வழக்கத்தை மாற்றி, சோக முடிவு கொண்ட நாடகங்களையும் அரங்கேற்றினார். நடிப்பவர்களை ‘கூத்தாடிகள்’ என்று அழைக்காமல் ‘கலைஞர்கள்’ என்று அழைக்கச் செய்தார். மொத்தம் 94 நாடகங்கள் எழுதியுள்ளார். அதில் 850 முறை மேடையேறிய மனோகரா, 300 முறை நடிக்கப்பட்ட லீலாவதி-சுலோசனா குறிப்பிடத்தக்கவை.

இவரது ‘இந்தியனும்-ஹிட்லரும்’, ‘கலையோ காதலோ’ உள்ளிட்ட 30 தமிழ் நூல்கள், அமலாதித்யா, லார்ட் புத்தா உள்ளிட்ட 30 ஆங்கில நூல்களை தமிழக அரசு நாட்டுடமை ஆக்கியது. பத்மபூஷண் விருது, நாடகப் பேராசிரியர் விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகள், பட்டங்களைப் பெற்றுள்ளார். தமிழக நாடக உலகின் பிதாமகனான இவர் 91 வயதில் மறைந்தார்.