வேகமாக வளரும் பாரதப் பொருளாதாரம்

பிரபல சர்வதேச தலைவர்கள், கண்டுபிடிப்பாளர்கள், தலைமை செயல் அதிகாரிகள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுக்கான உலகளாவிய மன்றமான ‘ராய்ட்டர்ஸ் நெக்‌ஸ்ட்’ நிகழ்ச்சியில் பாரதத்தின் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காணொலி மூலம் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “பணவீக்கத்தை சிறப்பாக கையாளுவதில் நாம் வெற்றியடைவோம். ஏனெனில் உணவுப் பொருட்களின் விலைகள் மீதான வினியோக அழுத்தங்களை நிவர்த்தி செய்ய மிக நல்ல கட்டமைப்பு ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் ரிசர்வ் வங்கியின் மதிப்பீட்டு அறிக்கைகள் தெளிவாக உள்ளன. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அல்லது நடுப்பகுதியில் இது நெகிழ்வுத்தன்மை பிரிவுக்குள் நன்றாக இருக்கும். நுகர்வோர் விலைக் குறியீட்டின் அடிப்படையிலான சில்லறை பணவீக்கம் ஜனவரி முதல், ரிசர்வ் வங்கியின் ஆறுதல் வரையறை அளவான 6 சதவீதத்தை விட அதிகமாக உள்ளது. பணவீக்கம் வெளிப்புற காரணிகளால் பாதிக்கப்படலாம். ஆனால் பாரதத்துக்குள், விவசாய பொருட்கள் மற்றும் பிற காரணிகளின் அடிப்படையில் நாம் வசதியான நிலையில் உள்ளோம். நல்ல, வேகமாக வளரும் பாரதப் பொருளாதாரத்தை அடுத்த ஆண்டும் எதிர்பார்க்கிறேன். கச்சா எண்ணெய் விலையை பொறுத்தவரை நாட்டின் நலன் சார்ந்த தனது நிலைப்பாட்டை பாரதம் ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ளது. எங்களுக்கு அவை மலிவு விலைகளில் கிடைக்க வேண்டும், நிலையான விலைகளை கொண்டிருக்க வேண்டும். உலகளாவிய பொது பொருட்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும். சரக்குகளின் இயக்கம் கட்டுப்படுத்தப்பட்டால், அது நம்மில் பலருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். பல நாடுகளைப் போலவே, ரஷ்யாவிலிருந்தும் நமது நாட்டின் இறக்குமதிகள் அதிகரித்து வருகின்றன. ஏனெனில் நமக்கு ரஷ்யாவிலிருந்து வாங்குவதற்கு விலை காரணிகள் சாதகமாக உள்ளன. இதில் நாம்இந்தியா தனிமைப்படுத்தப்படவில்லை” என்று கூறினார்.