குடும்ப அரசியல் ஒரு மன வியாதி

திருவாரூர் தேர் ஓடும் தெற்கு வீதியை தி.மு.க அரசு கலைஞர் கருணாநிதி வீதி என பெயர் மாற்றம் செய்யப்படுவதை கண்டித்து தமிழக பா.ஜ.க சார்பில் திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது, இந்த பிரம்மாண்டமான ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கி பேசிய தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, ‘தமிழகத்தின் கலாச்சாரத்தை மாற்றுவதற்கான முயற்சியில் தி.மு.க இறங்கியுள்ளது. தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு இரண்டு சாதனைகளை செய்துள்ளது. ஒன்று, மத்திய அரசு திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுவது மற்றொன்று ஊரின் பெயரை மாற்றுவது. திருவாரூர் தெற்கு வீதிக்கு கருணாநிதி பெயரை வைக்க நினைப்பது ஒரு மன வியாதி. குடும்ப அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு தான் இந்த வியாதி வரும். திருவாரூர் தெற்கு வீதியின் பெயரை மாற்ற மாட்டோம் என அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள், ஆனால் அவர்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. அதனால்தான், இந்த பிரம்மாண்டமான கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தி உள்ளோம். இதனை மீறி திருவாரூர் தெற்கு வீதிக்கு பெயர் மாற்றம் செய்ய நினைத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செயல்படாத அளவுக்கு பா.ஜ.க முற்றுகை போராட்டம் நடத்தும்’ என்றார்.