போலி போராளிகள் கைது

தங்கள் எதிர்கட்சியினர் மீது பழிகளை சுமத்த, அரசியல் ரீதியாக தாக்கி பேச, தங்களுக்கு எதிரான கருத்துகளை தடுக்க என திராவிட மாடல் அரசியலுக்காக போலி போராளிகளை தமிழகத்தில் வளர்த்து விடுவது தி.மு.க மற்றும் அதன் கூட்டணியின் வாடிக்கை. திருமுருகன் காந்தி, பியூஸ் மானுஸ், பூ உலகின் நண்பர்கள் சுந்தரராஜன், கோவன் போன்ற சிலரை இதில் குறிப்பிட்டு சொல்லலாம். குறிப்பாக, தி.மு.க. எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஆளும்கட்சியை தாக்க இவர்கள் பயன்படுத்தப்படுவார்கள். இவர்களுக்கான சார்பு ஊடகங்கள் இதனை ஊதி பெரிதாக்கும். அதேசமயம், தி.மு.க. ஆட்சியின்போது இவர்கள் நீண்ட உறக்கத்திற்கு சென்று விடுவார்கள் என்ற குற்றச்சாட்டும் பல காலமாக உள்ளது. அந்த வரிசையில் ஒருவர்தான் நந்தினி. சமீபத்தில் நந்தினியும் அவரது தங்கையும், திண்டுக்கல் பேருந்து நிலையத்திற்கு கையில் பதாகைகளுடன் வந்தனர். பா.ஜ.க. அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களிடம் விநியோகித்தனர். இது குறித்து தகவல் அறிந்த அந்த மாவட்ட பா.ஜ.க. தகவல் தொழில்நுட்ப அணியினர், பேருந்து நிலையத்தில் அவதூறு பிரசாரம் செய்து வந்த நந்தினியிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். காவல்துறைக்கும் தகவல் கொடுத்தனர். அங்கு வந்த காவல் துறையினர், நந்தினியையும் அவரது சகோதரியையும் வேனில் ஏற்றிக் கொண்டு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். நந்தினி உள்ளிட்ட இந்த போலி போராளிகள் தி.மு.க ஆட்சியில் நிகழும் அட்டூழியங்கள், ஊழல்கள், கருணாநிதி குடும்பத்தினர் கைப்பிடியில் சிக்கித் தவிக்கும் ரியல் எஸ்டேட், சினிமா, தொழில்துறை போன்றவற்றை பற்றியோ அல்லது போதை மருந்து புழக்கம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், கொலை கொள்ளை, தி.மு.க ரௌடிகளின் அட்டகாசங்கள், தமிழகத்தில் ஆறாக ஓடும் மது போன்றவைகளை பற்றியெல்லாம் பேசுவதேயில்லை என்ற குற்றச்சாட்டும் பல காலமாக உள்ளதையும் தமிழக மக்கள் சற்றே சிந்தித்து பார்க்க வேண்டும்.