போலி நில ஆவண மோசடி

காஞ்சீபுரம் ஹாஸ்பிடல் சாலையை சேர்ந்தவர் மல்லிகா என்பவரின் கணவர் சந்திரபாபு சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்கள் 1997ல் ஆவடி அடுத்த வெள்ளானூர் ஆர்ச் அந்தோணி நகரில் 1,200 சதுர அடி நிலத்தை வாங்கினர். சில நாட்களுக்கு முன் மல்லிகா தங்கள் நிலத்தை பார்வையிட வெள்ளானூர் வந்தார். அப்போது அந்த இடத்தை வேறு ஒருவர் ஆக்கிரமித்து இருந்தது தெரியவந்தது. இதையடுத்து ஆவடி பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு அவர் சென்று விசாரித்தபோது, சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகர் 5வது பிளாக்கை சேர்ந்த சையத் இப்ராஹிம் என்பவர் பெயரில் அந்த நிலம் இருந்ததும் அதனை 2020ல் சென்னையைச் சேர்ந்த டானிபாய் என்பவருக்கு அவர் விற்றதும் தெரியவந்தது. இதுகுறித்து மல்லிகா ஆவடி காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதையடுத்து நில மோசடி தடுப்பு பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சையத் இப்ராஹிமை அழைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சையத் இப்ராஹிமும் அவரது கூட்டாளிகளும் சேர்ந்து மல்லிகாவின் கணவர் பெயரில் போலியாக ஒரு இறப்பு சான்றிதழும் அவரது மகள் தேவி பெயரில் பொய்யான வாரிசு சான்றிதழும் பெற்று ஆவடி சார் பதிவாளர் அலுவலகத்தில் போலி ஆவணம் மூலம் டானிபாய் என்பவருக்கு ரூ. 87 லட்சம் மதிப்புடைய அந்த நிலத்தை விற்றது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் சையத் இப்ராஹீமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.