முதல்வரின் உதவியாளரிடம் அமலாக்கத்துறை சோதனை

ஹேமந்த் சோரனின் நெருங்கிய உதவியாளரும், சாஹிப்கஞ்ச் தொகுதி எம்.எல்.ஏவுமான பங்கஜ் மிஸ்ரா தொடர்புடைய 17 இடங்களில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். சாஹிப்கஞ்சில் உள்ள பதர்வா காவல் நிலையத்தில் ஒரு சுங்க வரி ஒப்பந்ததாரர் ஜூன் 2020ல் புகார் அளித்திருந்தார். அதில், பங்கஜ் மிஸ்ரா 2008 முதல் 2011 வரையிலான காலத்தில் பணமோசடி செய்திருக்கிறார். அது தொடர்பாக விசாரித்தபோது தன்னை அவரது ஆதரவாளர்கள் தாக்கினர் எனக் குறிப்பிட்டிருந்தார். ஜார்கண்ட் காவல்துறையினர் மிஸ்ராவுக்கு எதிராகப் பணமோசடி தொடர்பாக பதிவுசெய்த வழக்கு அடிப்படையில் அமலாக்கப் பிரிவின் சோதனை நடைபெற்றது. இந்த விவகாரம் அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.