நிலவேம்பு கஷாயம், பப்பாளி இலை சாறு குடிங்க!

‘டெங்கு, ‘ப்ளூ’ உள்ளிட்ட காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், முன்தடுப்பு நடவடிக்கையாக நிலவேம்பு கஷாயம், பப்பாளி இலை சாறு அருந்தலாம்’ என, சித்தா டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் பருவநிலை மாற்றத்தால், காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட உடல் உபாதைகளால், மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அத்துடன், கேரளாவில், ‘நிபா’ வைரஸ் தொற்று பரவி வருவதால், கொரோனாவை போல, ‘முககவசம்’ அணிதல், கைகளை அடிக்கடி சுத்தம் செய்தல் போன்றவற்றை கடைப்பிடிக்க பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

இந்நிலையில், தொடர்ந்து காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், முன் தடுப்பு நடவடிக்கையாக, ஐந்து நாட்கள் வரை, ‘நிலவேம்பு’ கஷாயம் அருந்தவும், டெங்கு உறுதியான பின், பப்பாளி இலைசாறு அருந்தவும், சித்தா டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, அரும்பாக்கம் சித்தா மருத்துவமனை டாக்டர் பாஸ்கர் கூறியதாவது: காய்ச்சல் வரும் முன் கூட, நிலவேம்பு கஷாயம் அருந்தலாம். பெரியவர்கள் ஐந்து நாட்கள் வரை காலை, மாலையில், 30 முதல் 50 மில்லி வரை; குழந்தைகள் வயதுக்கு ஏற்ப, 10 முதல் 20 மில்லி, நிலவேம்பு குடிநீர் அருந்தலாம். இவை, எவ்வகை காய்ச்சலாக இருந்தாலும் அருந்தலாம்.

டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டவர்கள், 10 மில்லி பப்பாளி இலை சாறு அருந்தலாம். சிறியவர்களுக்கு, 1 முதல் 5 மில்லி போதும். இவற்றில் வெல்லம், சர்க்கரை போன்றவற்றை கலந்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்; கர்ப்பிணியர் அருந்துவதை தவிர்க்க வேண்டும். காய்ச்சல் ஏற்பட்டு, அலோபதி மருந்து எடுத்து கொள்பவர்கள், சித்தா டாக்டரின் ஆலோசனைப்படி தான், நிலவேம்பு கஷாயம் மற்றும் பப்பாளி இலைசாறு அருந்த வேண்டும். காய்ச்சலுக்கு பின், சுயமாகவும், அளவுக்கு அதிகமாகவும் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.