தொடரும் தி.மு.கவின் நில அபகரிப்பு

தஞ்சாவூர் வடக்கு மாவட்ட தி.மு.க. அலுவலகம் கட்டுவதற்கு, கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் செங்கல்லை எடுத்துக் கொடுத்து தொடங்கி வைத்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். இதைத் தொடர்ந்து, கட்சி அலுவலகத்துக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த சூழலில், தி.மு.க அலுவலகம் கட்டுவதற்கு தனக்குச் சொந்தமான சுமார் 1,000 சதுர அடி இடம். இதனை தி.மு.க. மாவட்டச் செயலாளர் கல்யாணசுந்தரம் அபகரித்து விட்டார். என்னுடைய இடம் மட்டுமல்லாமல், அரசு இடத்தையும் இதற்கான ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். உன்னால் முடிந்ததைப் பார்த்துக்கொள் என கூறி மிரட்டுகின்றனர். முதல்வர் ஸ்டாலின் இதில் தலையிட்டு என்னுடைய இடத்தை எனக்குக் மீட்டுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வம் என்பவர் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளார். இது குறித்து பேசிய செல்வம், “எனது சொந்த ஊர் வலங்கைமான். கும்பகோணம் ரயில் நிலையத்துக்கு அருகில் எனக்குச் சொந்தமாக 6,523 சதுர அடி நிலம் உள்ளது. அந்த இடத்துக்கு வடக்கு பக்கமாக தி.மு.க அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக, எனது இடத்தின் பின் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சுற்றுச்சுவரை சேதப்படுத்தி, 1,000 சதுர அடி இடத்தை ஆக்கிரமித்துள்ளனர். இதுகுறித்து கல்யாணசுந்தரத்திடம் கேட்டதற்கு, உன்னால் முடிந்ததைப் பார்த்துக்கொள் என்றார். இதுகுறித்து நான் ஆன்லைன் மூலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால், காவல்துறையினர் விசாரணையை நடத்தவில்லை. இதையடுத்து கும்பகோணம் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தேன். மனுவை விசாரித்த நீதிமன்றம், வரும் 2ம் தேதி வரை அந்த இடத்தில் யாரும் நுழையக் கூடாது என்று தடை விதித்துள்ளது. மேலும், இது தொடர்பாக தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், கல்யாணசுந்தரம் இருவரும் ஆஜராகி விளக்கமளிக்க சம்மன் அனுப்பியது. ஆனால் நீதிமன்ற உத்தரவையும் மீறி தி.மு.க. அலுவலகம் கட்டும் பணி தொடர்கிறது. இதையறிந்து, சம்பவ இடத்துக்குச் சென்று அங்கிருந்த பணியாளர்களிடம் இதுகுறித்து கேட்டபோது, ‘நீ இங்கு வந்தால் மாவட்டச் செயலாளர் உன்னை அடித்து விரட்டச் சொல்லியிருக்கிறார். ஓடிவிடு’ என்று மிரட்டினார்கள். இது தொடர்பாகவும்காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். இதற்காக அவர்கள் அரசு இடத்தையும் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்” என்றார்.