தி.மு.க என்றாலே கட்டப்பஞ்சாயத்துதான்

கோவை மேட்டுப்பாளையத்தில் பா.ஜ.கவின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, “இந்தக் கூட்டத்தை வரும் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான கூட்டமாக நான் பார்க்கிறேன். பிரதமர் மோடி தலைமையில் பாரதம் பல்வேறு துறைகளிலும் முன்னேறிக்கொண்டுள்ளது. உலக நாடுகள், கொரோனா மற்றும் உக்ரைன் போருக்குப் பிறகு முன்னேற்றப் பாதையில் பயணிக்கும் பாரதத்தையும் அதனை வழிநடத்தும் பிரதமர் மோடியின் தலைமைப் பண்பையும் வியந்து பாராட்டுகின்றனர். உலகின் பொம்மைகள் ஏற்றுமதி, மருந்துப் பொருட்கள் தயாரிப்புத் துறைகளில்ல் பாரதம் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. வேதியியல் பொருட்கள் ஏற்றுமதியில் உலகில் 2வது இடத்தில் உள்ளது. அலைபேசி உற்பத்தி, இரும்பு ஏற்றுமதியில் 2வது இடத்தில் உள்ளது.  ஆட்டோமொபைல் உற்பத்திகளில் 4வது இடத்தில் உள்ளது. கோவை இதில் முக்கிய பங்காற்றி வருகிறது.

சாதாரண மக்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. பெண்கள், இளைஞர்கள், ஏழைகள், விவசாயிகள் என அனைவருக்கும் எப்படி அதிகாரம் வழங்குவது என்பதை பா.ஜ.கவின் ஆட்சி காட்டிக்கொண்டுள்ளது. ஏழை மக்கள் பசியோடு உறங்கக் கூடாது என்பதற்காக, ‘பிரதம மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா’ எனும் வறுமை ஒழிப்புத் திட்டத்தின் மூலம், ஒவ்வொரு நாளும் 80 கோடி மக்கள் உணவருந்திவிட்டு படுக்கைக்குச் செல்லும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஏழை மக்களுக்கு வீடுகள் வழங்கும் அவாஸ் யோஜனா திட்டம், ரூ. 5 லட்சம் மருத்துவக் காப்பீட்டுத் திட்டமான ஆயுஷ்மான் பாரத், 16 கோடி குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 40 சதவீத பாரத மக்கள் தரமான மருத்துவ வசதிகளை பெற்று பயனடைகின்றனர். 46 கோடி மக்களுக்கு ஜன்தன் யோஜனா திட்டத்தின் மூலம் வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. இப்படி பல்வேறு திட்டங்களின் மூலம் ஏழைகளின் வாழ்வில் இந்த அரசு மிகப் பெரிய ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறது.

பிரதமர் மோடியின வார்த்தைகள் வெற்று கோஷங்கள் அல்ல. ‘அனைவருடனும் சேர்ந்து அனைவருக்குமான வளர்ச்சி’ என்ற வார்த்தை வெற்றுக் கூச்சல் அல்ல. பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவரை இந்த நாட்டின் குடியரசுத் தலைவராக பா.ஜ.க முன்னிறுத்தியது. பா.ஜ.கவில் அதிக எண்ணிக்கையில் பழங்குடியின, பட்டியல் இனத்தைச் சேர்ந்த பெண்கள் உள்ளனர். பழங்குடியின, பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள்தான் மத்திய அரசில் அமைச்சர்களாக உள்ளனர். தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரிகள் வழங்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் பலன் அடைந்துள்ளது. பாதுகாப்பு தளவாட உற்பத்தி மையம், செம்மொழி தமிழ் ஆய்வு நிறுவனத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு, 6 வழிச் சாலைகளை 8 வழிச் சாலைகளாக மாற்றுவது, 800 கோடி ரூபாய் செலவில் 8 புதிய ரயில்வே நிலையங்கள் உள்ளிட்ட திட்டங்களை எல்லாம் தமிழகத்திற்கு அதிக நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

தமிழகத்தை ஆளும் தி.மு.கவின் முக்கிய நோக்கமே அவர்களது முதல் குடும்பத்தைப் பாதுகாப்பதுதான். தி.மு.கவில் வரும் டி என்பது Dynasty (வாரிசு அரசியல்), எம் என்பது Money (பணம்), கே என்பது கட்டப்பஞ்சாயத்து. தி.மு.க என்றாலே கட்டப்பஞ்சாயத்துதான். கொள்ளையடிப்பது மட்டும்தான் தி.முக.வின் நோக்கம். அவர்கள் மக்களுக்கான ஆட்சி செய்யவில்லை. இந்த தேசம் ஒரு பாதுகாப்பான கைகளில் இருப்பதைப் போல, தமிழகம் பாதுகாப்பான கைகளில் இல்லை. பா.ஜ.கவைப் பொறுத்தவரை தேசம்தான் முதன்மையானது, கட்சி அதற்கு பிறகுதான், சுயநலம் என்பது இறுதியானது. அதற்கு முற்றிலும் மாறுபட்டது தி.மு.க” என்று கூறினார்.