மதம் மாறிய திருமணத்தால் கொலை மிரட்டல்

ஜார்கண்டின் கோடா மாவட்டத்தில், முஸ்கன் காதுன் என்ற ஒரு முஸ்லிம் பெண், ஹிந்து மதத்தைத் தழுவி, தனது ஹிந்து துணைவான ராமை மணந்தார். முஸ்கன் காதுன் இதுகுறித்து கூறுகையில், “எனக்கு ஹிந்து தர்மம் பிடிக்கும். எனது இந்த முடிவில் நாம் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்” என கூறினார். ராம் மற்றும் முஸ்கான் இருவரும் கோடாவில் வசிக்கின்றனர். முஸ்கான் பீகாரின் பாகல்பூரைச் சேர்ந்தவர். தனது தாய்வழி பாட்டியுடன் கோடாவில் தங்கி தனது படிப்பைத் தொடர்ந்தார். ராமும் முஸ்கானும் ஒரு வருடத்திற்கு முன்பு சந்தித்து நண்பர்களாகினர். இவர்களின் நட்பு, காதலாக மலர்ந்தது. இருப்பினும், முஸ்கன் காதுனின் குடும்ப உறுப்பினர்கள் இதனை கடுமையாக எதிர்த்தனர். இதையடுத்து, கடந்த அக்டோபர் 17, 2022 அன்று, தம்பதியினர் தங்கள் திருமணத்தைப் பதிவு செய்ய உள்ளூர் நீதிமன்றத்தை அடைந்தனர். ஆனால், முஸ்கானின் குடும்ப உறுப்பினர்கள் இதைப் பற்றி அறிந்து நீதிமன்ற வளாகத்திற்கு வந்து அவரைத் தாக்கினர். காவல்துறையினர் தலையிட்டு அதனை தடுத்தனர். இதையடுத்து நீதிமன்றத்தில், எனக்கும் ராமுக்கும் என் குடும்பத்திடம் இருந்து பாதுகாப்பு அளிக்க வேண்டும். எனது சொந்த விருப்பத்தின் பேரில் தான் ராமை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என தெரிவித்தார் முஸ்கான். இருவருக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. பின்னர் தம்பதியினர் பாகல்பூரில் உள்ள பீர்பைண்டியில் அமைந்துள்ள மீனாட்சி கோயிலுக்கு சென்றனர். அங்கு முஸ்கான் ஹிந்து தர்மத்திற்கு மாறினார். ‘ஹர ஹர மகாதேவ்’ என்ற கோஷங்களுக்கு மத்தியில், நவம்பர் 22 அன்று ஹிந்து பாரம்பரிய முறைப்படியிலான திருமண விழாவில் ராமை மணந்தார். ராமின் குடும்பத்தினர் திருமணத்தை ஏற்றுக்கொண்டனர். திருமணத்தில், பல விஷ்வ ஹிந்து பரிஷத் (வி.ஹெச்.பி), பஜ்ரங் தள் உள்ளிட்ட அமைப்புகளின் செயல்பாட்டாளர்களும் கலந்து கொண்டனர் என கூறப்படுகிறது. இந்த சூழலில், முஸ்கானின் குடும்பத்தினர், தங்களது பெண் ஹிந்து மதத்திற்கு மாறி ஹிந்து ஒருவரை திருமணம் செய்து கொண்டதால், கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர் என குற்றம் சாட்டியுள்ளார் முஸ்கான்.